லக்னோ, மே 31- உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜ தலைமையிலான ‘டபுள் எஞ்சின்’ ஆட்சியில், உள் கட்டமைப்பு பணிகளின் தரம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பும் வகையில் அடுத்தடுத்து இரு பெரும் விபத்துகள் அரங்கேறி யுள்ளன.
ஹமிர்பூரில் புதிதாக கட்டப் பட்டு வந்த பாலம் பலத்த காற்றிற்கு சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொரு சம்பவத்தில், லக்னோ ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பயணச் சீட்டுப் பரிசோதகர் உட்பட மூவர் படுகாய மடைந்துள்ளனர்.
காற்றில் பறந்த தரம்
உத்தரப் பிரதேசம், ஹமிர்பூர் மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள லால்புரா காவல் எல்லைக்குட் பட்ட பர்சானி மற்றும் கந்தவுர் கிராமங்களுக்கு இடையே பெட்வா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 29.5.2026 அன்று அதிகாலை இப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியது. அப்போது, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாலத்தின் மீதே தூங்கிக் கொண் டிருந்ததாகக் கூறப்படுகிறது. எதிர் பாராதவிதமாக, வீசிய காற்றின் வேகத்திற்கு தாங்காமல் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து ஆற்றுக்குள் சரிந்தது.
இதில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தும், இடிபாடுகள் மற்றும் தூண்களுக்கு அடியிலும் சிக்கித் தவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், இந்த கொடூர விபத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பாலத்தின் தூணுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்த 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, ஹமிர்பூர் மாவட்ட மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரயில் நிலைய கூரை சரிந்தது
இதேபோல், லக்னோவில் உள்ள புகழ்பெற்ற சார்பக் ரயில் நிலையத்தில் தற்போது புதுப்பித்தல் மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை 8.15 மணியளவில், வழக்கம் போல 5ஆவது நடைமேடையில் (Platform 5) ஏராளமான பயணிகள் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக நடைமேடையின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளில் சிக்கி, அங்கு பணியில் இருந்த பயணச் சீட்டுப் பரிசோதகர் (TTE) அமித் மற்றும் பயணிகள் அகிலேஷ், சாஹில் ஆகிய மூவர் பலத்த காயமடைந்தனர். இதில் பயணி அகிலேஷின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் கேள்வி
“டபுள் எஞ்சின் அரசு” என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் பாஜ ஆட்சியில், வெறும் காற்றுக்கே புதிய பாலம் சரிந்து விழுவதும், முக்கிய ரயில் நிலையத்தின் கூரை இடிந்து விழுவதும் பொதுமக்க ளிடையே பெரும் அதிர்ச்சியையும், உள்கட்டமைப்பு பணிகளின் தரம் குறித்த கடுமையான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
