புதுடில்லி, மே 24 பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிவ் சுக்லா 23.5.2026 அன்று தெரிவித்துள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் காரணமாக, உலகளவில் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கடந்த பத்து நாள்களில் மட்டும் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் சுக்லா கூறியதாவது: “பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிர்ச்சியாகும். இந்த விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கம் அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒன்றிய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையின் காரணமாகவே, இன்று பெட்ரோல், டீசல் விலை இந்த அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதுவரை ஒரு லிட்டருக்கு சுமார் 5 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இனி வரும் நாள்களில் இன்னும் எவ்வளவு உயரும் என்று தெரியவில்லை.” தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி 23.5.2026 அன்று 51,000 இளைஞர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கியது குறித்தும் விமர்சித்தார். “நாட்டில் தற்போது சுமார் 22 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதாக நான் நம்புகிறேன். இத்தகைய சூழலில், வெறும் 51,000 இளைஞர்களுக்கு மட்டும் பணிநியமன ஆணைகளை வழங்கினால் அது எப்படிப் போதுமானதாக இருக்கும்? எனவே, ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை துளியும் போதாது,” என்று ராஜிவ் சுக்லா சாடியுள்ளார்.
