புதுடில்லி, மே 22 இந்தியப் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் தீவிரமான மறுசீரமைப்பு தேவை என்றும், தற்போதைய மோடி அரசிடம் புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல் தீர்ந்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பணவீக்கம் குறித்த கணிப்புகள் கடுமையாக உயர்ந்துள்ள அதே வேளையில், நாட்டின் பொருளா தார வளர்ச்சி குறித்த கணிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந் துள்ளன. நேரடி அன்னிய முதலீடு களும் (FDI) தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. தற்போதைய சூழலில் நமது பொருளாதாரக் கொள்கை வகுப்பில் ஒரு தீவிர மான மறுசீரமைப்பு நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால், மோடி அரசிடம் வழக்கமான சுய புகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்தவொரு புதிய யோசனைகளும் எஞ்சியிருக்கவில்லை.”
மேலும், தேர்தல் ஆணையத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “பிரதமர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூலம் தேர்தல்களை நிர்வகித்து வருகிறார். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அவருக்குப் புதிய ‘ஞானம்’ (அறிவு) தேவைப்படுகிறது” என்று சாடினார்.
ஒன்றிய அரசின் தன்னிச்சையான போக்கினால் வணிகத் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷ்,
கொள்கைகளில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், அவசர நிர்வாக உத்தரவுகள், புதிய வரி அறிவிப்புகள், வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அதிரடிச் சோதனைகள், மற்றும் சோதனைகள் குறித்த அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் காரணமாக, முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது பெரும் அச்சமும், வணிகம் சார்ந்த நிச்சயமற்ற தன்மையும் நிறைந்த ஒரு சூழல் நிலவி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
