புதுடில்லி, மே 22- அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மனு
‘லட்லி அறக்கட்டளை’ சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
“நாட்டின் சட்டத் துறையில் பாலின சமத்துவத்திற்கான அரசமைப்பு உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், ஆழமான பாலின ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. அரசு குழுக்கள் மற்றும் முக்கிய சட்டப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது.
இதுவரை இந்தியாவின் ‘அட்டர்னி ஜெனரல்’ அல்லது ‘சொலிசிட்டர் ஜெனரல்’ ஆகிய உயர் பதவிகளில் ஒரு பெண் வழக்குரைஞர் கூட நியமிக்கப் படவில்லை. அதேபோல், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக பெண்கள் யாரும் பணியாற்ற வில்லை.
எனவே, உச்சநீதிமன்ற குழுக்கள் முதல் உள்ளூர் சட்ட உதவி குழுக்கள் வரை, அனைத்து அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.”
உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிக்கை
இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி கள் ஜயமால்ய பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவிக்கை அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
