அய்தராபாத், மே 18 ஒன்றிய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்குமாரின் மகன் பண்டி பகீரத், போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக பண்டி பகீரத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன் மீதான கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி பண்டி பகீரத் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தெலங்கானா காவல்துறையினர் பண்டி பகீரத்தை உடனடியாகக் கைது செய்துள்ளனர். ஒன்றிய அமைச்சரின் மகன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
