பசிபிக் கடலில் உலகையே வியக்க வைத்த புதிய கண்டுபிடிப்பு: 6,200 மீ. ஆழத்தில் கருப்பு முட்டைகள்…

பசிபிக் பெருங்கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்ட விசித்திரமான கருப்பு முட்டைகள், அதீத அழுத்தத்திலும் உயிர்கள் வாழ முடியும் என்பதை நிரூபித்த ஜப்பான் விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு குறித்த முழு விபரங்களைப் பார்ப்போம்.

பசிபிக் பெருங்கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில், இதுவரை அறியப்படாத விசித்திரமான ‘கரும்பச்சை-கருப்பு’ நிற முட்டைகளை கடல் உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமியின் மிகவும் கடினமான சூழலிலும் உயிர்கள் வாழ முடியும் என்பதற்கு இந்த தேடல் ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளது. வடமேற்கு பசிபிக் பகுதியில் உள்ள குரில்-கம்சட்கா அகழியில் (Kuril–Kamchatka Trench) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, கடல் மட்டத்தில் இருந்து பல கிலோமீட்டர் ஆழத்தில் பாறைகளுடன் ஒட்டிக்கொண்டிருந்த சிறிய கருப்பு நிற உருண்டைகளைக் கண்டனர். சுமார் 3 மில்லிமீட்டர் அளவுள்ள இவை பார்ப்பதற்குச் சிறிய கருப்பு முத்துக்கள் போல இருந்தன.

ஆராய்ச்சியாளர்கள் இவற்றை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று சோதித்தபோது, அவை முட்டைகள் அல்ல, உண்மையில் ‘கூடுகள்’ (Cocoons) என்பது தெரியவந்தது. அந்த கூடுகளைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பால் போன்ற கருவுணவு (Yolk) மற்றும் தட்டைப்புழுக்களின் கருக்கள் (Flatworm embryos) இருந்தன. டி.என்.ஏ சோதனையில், இவை ‘பிளாட்டிஹெல்மின்தெஸ்’ (Platyhelminthes) என்ற தொகுதியைச் சேர்ந்த முற்றிலும் புதிய வகை இனம் என்பது உறுதி செய்யப்பட்டது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் மருத்துவர் கெய்ச்சி ககுய்-டோக்கியோ பல்கலைக்கழக வல்லுநர்கள் இணைந்து, அதிநவீன ‘ரிமோட்’ மூலம் இயங்கும் வாகனத்தைப் (ROV) பயன்படுத்தி கடலின் இருண்ட ஆழமான ‘ஹாடல் மண்டலத்தில்’ (Hadal zone) இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

முட்டைகள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளன? இந்த முட்டைகள் கருப்பு நிறத்திலும், தோல் போன்ற கடினமான அமைப்பிலும் இருப்பதற்குப் பின்னால் முக்கிய காரணங்கள் உள்ளன. கடல் மட்டத்தை விட 600 மடங்கு அதிகமான அழுத்தத்தைத் தாங்கும் வகையில் இந்த நிறமிகளும், கடினமான தோலும் அமைந்துள்ளன. பாறைகளில் உறுதியாக ஒட்டிக்கொள்ளவும், நுண்ணுயிரிகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது. சூரிய ஒளி துளியும் படாத உறைபனி இருட்டில், கருக்கள் நிலையாக வளர இந்த நிறமிகள் உதவுகின்றன.

கடலின் இவ்வளவு ஆழமான பகுதியில், அதீத அழுத்தத்திற்கு இடையே தட்டைப்புழு போன்ற சிறிய உயிரினங்கள் வாழ்வது மட்டுமல்லாமல், வெற்றிகரமாக இனப்பெருக்கமும் செய்கின்றன என்பது மிகப்பெரிய அறிவியல் மைல்கல் ஆகும். சில கடல்வாழ் உயிரினங்கள், ஆழ்கடலின் ஆழமான அகழிகளில் குடியேறுவதற்காக வியக்கத்தக்க பரிணாம மாற்றங்களை அடைந்துள்ளன என்பதை இந்த ‘கருப்பு முட்டைகள்’ நிரூபிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *