மண்டபம், மே 13- தமிழ்நாட்டு கடல் பகுதியில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மணக்குடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ், வர்கீஸ், சந்தான அலோஜிஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட், சகாய செல்வ சூசை ஆகிய 6 பேர் நேற்று முன்தினம் (11.5.2026) மண்டபத்தில் இருந்து நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் நேற்று (12.5.2026) அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுடன் 6 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் மீனவர்களை இலங்கை டிக்கிவிட்டா துறைமுகத்திற்கு அழைத்து சென்று, நீர்கொழும்பு மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் மீனவர்கள் மீது எல்லை கடந்து வந்ததாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அரசு செவிலியர் கல்லூரி முதல்வர்
சங்கர் சண்முகம் உட்பட 15 பேருக்குப்
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது!
புதுடில்லி, மே 13- பன்னாட்டு செவிலியர் தினத்தையொட்டி ஒன்றிய அரசு சார்பில் சிறந்த செவிலியர்களுக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது விழா டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (12.5.2026) நடைபெற்றது. அப்போது சென்னை அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் சங்கர் சண்முகம் உட்பட 15 பேருக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
செவிலியர் கல்வியில் 26 ஆண்டு கால சேவையை அங்கீகரிக்கும் வகையில் சங்கர் சண்முகத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. கருநாடகாவை சேர்ந்த கவிதா, கேரளாவை சேர்ந்த மஞ்சுமோல் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது: கருணை, அர்ப்பணிப்பு உணர்வு, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்குடன் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. நோயாளிகளைப் பராமரிப்பதில் தாய் உள்ளத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர். நைட்டிங்கேல் விருது பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.
