புதுடில்லி, மே 5- ஆயுஷி மிட்டல் என்ற பெண் சுமார் ரூ.37,000 கோடி முதலீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபரான இவர் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத்துறையை தரப்பாகச் சேர்க்கவும், இதுகுறித்து அமலாக்கத் துறைக்கு அறிக்கை அனுப்பவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடந்த விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 4.5.2025 அன்று இந்த வழக்கு மீண்டும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. விசாரணையின் போது, நீதிமன்றத்தின் பதிவாளர் பிரிவு அமலாக்கத்துறைக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பவே இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதிவாளர் பிரிவு அதிகாரிகளை அழைத்து, “உச்சநீதிமன்ற பதிவாளர் பிரிவு மிகவும் மோசமாக செயல்படுகிறது. அங்குள்ள அதிகாரிகள் தங்களை ஒரு “சூப்பர் தலைமை நீதிபதி” என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால், அதற்கு இவர்கள் தங்களுக்குத் தோன்றியபடி விளக்கம் கொடுத்துக் கொண்டு, உத்தரவைச் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள்.
நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதுதான் நிர்வாகப் பிரிவின் வேலை.
ஆனால், ஒரு வழக்கின் முக்கி யத்துவத்தைக் குறைக்கும் வகையிலோ அல்லது ஒரு தரப்பிற்குச் சாதகமாகவோ அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
அதனால்தான், பதிவாளர் பிரிவு அதிகாரிகள் தங்களை நீதிபதிகளுக்கும் மேலானவர்களாக நினைக்கின்றனர்.
நீதிமன்றம் உத்தரவிட்டும், அமலாக்கத்துறைக்கு அறிக்கை அனுப்பத் தேவையில்லை என்று பதிவாளர் பிரிவு அதிகாரிகள் எப்படித் தன்னிச்சையாக முடிவு எடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
