வேலூர், மே 3- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136 ஆவது பிறந்தநாள் மற்றும் மே-1 தொழிலாளர் தினம் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் தொடக்க விழா, 1-5-2026அன்று, மாலை 5 மணியளவில் குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை, பெரியார் அரங்கில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் முனைவர் வே.வினாயக மூர்த்தி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வேலூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இ.தமிழ்தரணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சி.லதா,
நகர கழகத் தலைவர் சி. சாந்தகுமார், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.ரம்யா வேலூர் மாநகர ப.க. தலைவர் கே.எஸ்.அஸ்ரப்,ஓவியப் பயிற்சியாளர் ஜி.மெய்யழகன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் பி.தனபால் இந்நிகழ்வில் தொடக்க உரையாற்றினார். மாநில மகளிர் அணி துனைச் செயலாளர் ந.தேன்மொழி, வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்தப் பயிற்சி முகாமில் பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் இர. அன்பரசன் ஆற்றிய நோக்க உரையில், “பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சினிமாவை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே கருத வேண்டும். நடிகர்களை, நடிகர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். பெற்றோர்களிடம் நடிகருக்கு அரசியல் ஆதரவு தர வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. இந்த வயதில் உங்களுடைய முழு கவனமும் கல்வியிலும், எதிர்கால வாழ்க்கையின் மீது மட்டுமே இருக்க வேண்டும். யாருக்காகவும் உங்களுடைய நேரத்தையும்,வாழ்க்கையையும் தொலைத்து விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சமூக சேவகர், மூத்த வழக்குரைஞர் கே.எம்.பூபதி ஆற்றிய சிறப்புரையில் “வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடைக்காலத்தில் சதுரங்கப் பயிற்சி முகாம் நடத்தி பல்வேறு மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் சாதனை படைத்துள்ளார்கள், அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஒரு மாதக்கால ஓவியப் பயிற்சி முகாம் நடத்துவது மிகவும் பாராட்டுக்குரியது. இந்தப் பயிற்சி வகுப்பை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னிலை பெற மனதார பாராட்டுகிறேன். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மக்களிடத்தில் பல்வேறு பகுத்தறிவு பிரச்சாரங்களை செய்துள்ளது, அந்த வகையில் பகுத்தறிவு உள்ள சிறந்த மாணவர்களை உருவாக்கிட இதுபோன்ற முகாம்கள் நடத்துவது சிறப்பாக இருக்கும் என்று பாராட்டி மகிழ்ந்தார்.
புரட்சிக்கவிஞருக்கு
வீர வணக்கம்…
ஓவியப் பயிற்சி முகாமின் தொடக்க விழாவில் அறிவாசன் தந்தை பெரியார் சிலைக்கும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் படத்திற்கும் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி முடிவில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் க.பரமசிவம் நன்றி உரையாற்றினார்.
