‘நீட்’ அனுமதிச் சீட்டுகளில் குளறுபடி, தவறுகள்! தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

2 Min Read

சென்னை, மே 3 தேசிய அளவில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு இன்று மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேசியத் தேர்வு முகமை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள தற்காலிக அனுமதிச் சீட்டுகளில் (Admit Card) இடம்பெற்றுள்ள வினோதமான மொழிபெயர்ப்புத் தவறுகள் தமிழ்நாடு மாணவர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பலர் இந்தத் தேர்வைத் தமிழ் மொழியில் எழுத விண்ணப்பித்திருந்தனர். பொதுவாக ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 முக்கிய மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இணையதளத்தில் இருந்து அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்த சில மாணவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. வினாத்தாள் மொழி (Medium of Question Paper) என்ற இடத்தில் ‘தமிழ்’ என்பதற்குப் பதிலாக ‘நாகர்’ (Nagar) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நீட் தேர்வு நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட 13 மொழி களின் பட்டியலில் ‘நாகர்’ என்ற ஒரு மொழியே இல்லாதபோது, இத்தகைய பிழை எவ்வாறு நேர்ந்தது என்பது மாணவர்களையும் பெற்றோர் களையும் திகைக்க வைத்துள்ளது. தமிழை தேர்வு செய்த பலருக்கு நாகர் என்று இருந்துள்ளது.

மொழிப் பிரச்சினை மட்டு மன்றி, அனுமதிச் சீட்டில் உள்ள மற்ற விவரங்களும் பார்ப்ப வர்களைச் அதிர்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு இருந்தது.

தேர்வர் பெயர்: மாணவரின் பெயர் இடம்பெற வேண்டிய ‘Candidate Name’ என்ற பகுதி, ‘வேட்பாளர் பெயர்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் போல வேட்பாளர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. Candidate என்பதை மாணவர் என்று மொழி பெயர்க் காமல் வேட்பாளர் என்று மொழி பெயர்த்தது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பாலினம்: ஆண் அல்லது பெண் (Gender) என்று குறிப் பிடப்பட வேண்டிய இடத்தில், ‘திருமணம்’ என்று அச்சிடப்பட்டுள்ளது. இது எந்த அடிப்படையில் மொழிபெயர்க்கப் பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது.

தேர்வு விவரங்கள்: ‘Test Details’ என்ற பகுதி, ‘சோதனை விவரங்கள்’ என்று நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நேரடியாக google translateல் தமிழ் மொழியே தெரியாத ஒருவர் மொழி பெயர்த்தது போல இது உள்ளது.

தொழில்நுட்பக் கோளாறா? அல்லது அலட்சியமா?

இந்தக் குளறுபடிகளுக்குப் பின்னால் உள்ள காரணத்தை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்கத் தானியங்கி மொழிபெயர்ப்பு மென்பொருட்களால் (Google Translate போன்ற கருவிகள்) நேர்ந்த பிழை என்பது தெரியவந்துள்ளது.

ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யும் போது அனைத்துத் தகவல்களும் சரியாகவே உள்ளன. இருப்பினும், தமிழ் மொழியில் தகவல்களைப் பார்க்க விரும்பும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு நெருங்கி வரும் வேளையில், இத்தகைய மொழிபெயர்ப்புத் தவறுகளைக் கண்டு மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யும் போது, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்துப் பதிவிறக்கம் செய்வது இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.

கல்வித் துறை சார்ந்த முக்கிய ஆவணங்களை வெளியிடும் போது, தொழில்நுட்பக் கருவிகளை மட்டும் நம்பியிருக்காமல், முறையான மொழியியல் சரிபார்ப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. இன்னும் எத்தனை மாணவர்கள் இத்தகைய ‘முழி’பெயர்ப்புகளால் குழப்பமடைந்துள்ளனரோ என்பதுதான் தற்போதைய கவலை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *