மே 4ஆம் தேதி
தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது
கொல்கத்தா, ஏப்.27 மேற்கு வங்க சட்டமன்றத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்த அதிகார பலமும், பண பலமும் திரிணாமுல் காங்கிரஸிடம் எடுபடாது என முதலமைச்சர் மம்தா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஹூக்ளி மாவட்டம் உத்தரப்பாராவில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மம்தா, பாஜகவின் தேர்தல் வியூகங்களைக் கடுமையாகச் சாடினார். மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகப் பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை அனைவரும் இங்கேயே முகாமிட்டுள்ளனர். இதுதவிர, பாஜக ஆளும் 19 மாநிலங்களின் முதலமைச்சர்களும் இங்கேயே தங்கியிருந்து பிரசாரம் செய்கின்றனர்.
எங்களிடம் வெறும் 3 ஹெலிகாப்டர்கள் மட்டுமே உள்ளன. ஆனால், பாஜகவினர் 50 ஹெலிகாப்டர்களில் பறந்து பிரசாரம் செய்கிறார்கள். இத்தனை ஆரவாரங்களும் வரும் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது அடங்கிவிடும்.
மாநிலம் முழுவதும் தேவைப்படாத இடங்களிலும் கூட ஒன்றியப் படைகள் மற்றும் கவச வாகனங்களைக் குவித்து மக்களை பாஜக அச்சுறுத்துகிறது. நான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் வெளியூர் நபர்களைப் பாஜகவினர் சட்டவிரோதமாகத் தங்க வைத்துள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தான் வகிக்கும் பொறுப்பான பதவியை மறந்துவிட்டு, ஒரு தீவிரவாத பாணியில் பேசி வருகிறார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவி வரும் சூழலில், மம்தாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
