மும்பை, ஏப். 26– மும்பையில் பாஜக நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஆத்திரமடைந்து, அமைச்சர் கிரிஷ் மகாஜனை விமர்சித்த பெண் ஒருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. போராட்டம்!
மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாமதமாவதைக் கண்டித்து, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கடந்த 21.4.2026 அன்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஒர்லி பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர், சாலையில் நின்றிருந்த அமைச்சர் கிரிஷ் மகாஜனை நோக்கி ஆவேசமாகப் பேசினார். “உங்களால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியேறுங்கள். திறந்தவெளி மைதானத்தில் போராட்டம் நடத்த முடியாதா?” என்று அவர் தட்டிக்கேட்கும் காணொலிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அமைச்சரைத் திட்டிய அந்தப் பெண்ணுக்கு எதிராக ஜென் சடவர்தே என்பவர் ஒர்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகவும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினை குறித்து அமைச்சர் கிரிஷ் மகாஜன் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்தார்:
அந்தப் பெண்ணின் கோபத்தில் ஒரு நியாயம் உள்ளது. அவர் பேசிய விதம் தவறாக இருந்தாலும், அவர் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் கூறி இருந்தார்
மும்பை மாநகராட்சி மேயர் ரித்து தவாடேவும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்காக வருத்தம் தெரிவித்தார்.
அமைச்சரைத் திட்டிய பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாகப் போராட்டக்காரர்கள் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மோடி – அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் பெண்களை மதிக்கும் லட்சணம் இதுதானா? என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இச்சம்பவத்தை முன்வைத்து பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.
