புதுடில்லி, ஏப்.17 நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மறுவரையறை சட்ட மசோதா
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று (16.4.2026) தொடங்கியது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி களை மாற்றியமைக்கும் பொருட்டு தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு நிறைவேற்றவுள்ளது. இதற்கான விவாதம் இரு அவைகளிலும் நடைபெற்றது. தொகுதி மறுவரையறை செய்தால் நாடாளுமன்றத்தில் 543 என இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் தென் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் இதனால் குறையும் எனவும் கூறப்படுகிறது.
அதனால் தென் மாநிலங்களில் தொகுதி மறுவரையறை விசயத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. கூட்டத் தொடரில் கருப்பு உடை அணிந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்றனர். அதன் எதிரொலியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்தும், வீடுகளில் கருப்பு கொடி காட்டியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதற்கிடையில், “மக்களவையில் பெங்களூரு தெற்குத் தொகுதியைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பேசுகையில், “மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியுள்ள தெற்கு மற்றும் சிறிய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தற்போது முன்மொழிந்துள்ளதை விட சிறந்த இடங்கள் கிடைக்காது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென் மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். இதை விட சிறந்த ஒப்பந்தம் கிடைக்காது. தொகுதி மறுவரையறையை ஒரு பாதகமாகப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழ்நாட்டில் திமுக நடத்தும் போராட்டங்கள் நாடகம் என விமர்சித்தார். மசோதாக்கள் குறித்து மக்களைத் தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் தேசிய ஒருமைப்பாட்டையே நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் பிரிவினைவாத மொழியில் பேசும் தி.மு.க.வின் அரசியலை எதிர்க்கிறோம். அவர்களை நிராகரிக்கிறோம் என்று குற்றம் சாட்டினார்.
எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்
அவர் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசா, “1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்த போது நாட்டைக் காக்க ரூ.6 கோடி நிதி கொடுத்தோம். இது மற்ற மாநிலங்களை விடவும் அதிகம். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கார்கில் போருக்காக கலைஞர் தலைமையிலான அரசு ரூ.100 கோடி கொடுத்தது.
நாங்களா பிரிவினை அரசியல் செய்கிறோம்.
நாட்டுப்பற்றை அவர் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை.
நாங்களும் தேச உணர்வுக்கு ஆதரவாகவே நிற்கிறோம். ஒரே விஷயம் என்னவென்றால் நாங்கள் தனித்த அடையாளத்துடன் இருக்க விரும்புகிறோம். நீங்கள் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும்போது அதை எதிர்க்கிறோம். மாநில சுயாட்சிக்கு மரியாதை கொடுக்காத போது அதை எதிர்க்கிறோம்”
இவ்வாறு அவர் காட்டமாக பதில் அளித்தார்.

