சென்னை, ஏப்.16- விவசாயிகளின் உயிர்நாடியான இலவச மின்சாரம் கேள்விக்குறியாகிறதா..? புதிய மின்சாரத் திட்டம் வந்தால் இலவச மின்சாரம் முழுமையாக முடிவுக்கு வரும் என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த பேச்சுதான் சோஷியல் மீடியாவில் திமுக கூட்டணி தொண்டர் களால் பகிரப்பட்டு வருகிறது.
கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..
அப்போது பேசிய அவர், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.. குறிப்பாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எடுத்துள்ள அரசியல் முடிவுகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விவசாயம் செழிக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.கே.வாசன், விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி என்று ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்..
கலைஞர் தந்த
இலவச மின்சாரம்
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் குறித்து பேசிய ராமகிருஷ்ணன், 1989ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்திற்கு ஒன்றிய பாஜக அரசு வேட்டு வைக்க பார்க்கிறது.
புதிய மின்சாரத் திட்டத்தின் மூலம் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, அதனைத் தனியாருக்குத் தாரை வார்க்க பிரதமர் மோடி அரசு முயல்வதாகவும், இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்..
தன்னுடைய பேச்சின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் ராமகிருஷ்ணன் கடுமையான விமர்சனங் களை முன்வைத்தார்.

