உத்தரப்பிரதேச சாமியார் ஆட்சியில் மடங்கள், கோயில்களுக்கு வரி விதிப்பு துறவிகள் வரிந்து கட்டி எதிர்ப்பு

3 Min Read

புதுடில்லி, டிச.19  உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல முக்கியமானக் கோயில்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பிரிவுகளின் துறவிகளுக்கான மடங்கள், தர்ம சத்திரங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் வாராணசி மாநகராட்சி வரி வசூலிக்கிறது.

வரி பாக்கி தொடர்பாக மாநகராட்சி கால அவகாசத்துடன் நோட்டீஸ் அளித்திருந்தது. வரி செலுத்தாதவர்களுக்கு ஜப்தி அறிவிப்பும் ஒரிரு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.இதற்கு துறவிகளும், மடங்களின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வாராணசி பாதாளபுரி மடத்தின் தலைவர் ஜகத்குரு பாலக தேவாச்சார்யா கூறுகையில், ‘‘எங்கள் மடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான வரி நிலுவை இருப்பதாக கூறி ஜப்தி அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

சித்தா பீடம் சிறீ ஜாகேஷ்வர் மகாதேவ் கோயில் மடத்துக்கும் ரூ.65,000-க்கு மேல் வரி செலுத்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த மடத்தின் தலைமை அர்ச்சகர் சுவாமி மதுர் கிருஷ்ணாவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

‘‘வரி செலுத்தாவிட்டால் பறிமுதல், ஜப்தி என அச்சுறுத்துவது தவறு’’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், துறவிகள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில், உ.பி. அரசின் நடவடிக்கையை அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தின் ஜசியா வரிக்கு ஒப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ஓய்வு ஊதிய குழு அறிக்கை அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை, டிச.19 ஓய்வூதியக் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகிய மூன்று விதமான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய, ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் தமிழ்நாடு அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழு அமைத்தது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்ற இந்தக் குழு, கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கையை டிசம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்கக் குழுவுக்குக் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், ககன் தீப் சிங் பேடி குழுவின் இடைக்கால அறிக்கை பரிந்துரைகள் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் 17.12.2025 அன்று முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரிப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

சென்னை, டிச.19- தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக மாநில வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது.

* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியில் உற்பத்தி துறைக்கு பெரும் பங்கு உள்ளது.

* தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

* கடந்த 4 ஆண்டுகளில் 1.016 புரிந்துணர்வு ஒப்பந்தக்கள் கையெழுத்தாகி உள்ளது.

* முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

* மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரித்துள்ளது.

* உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 47 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்

சி.பி.எம். செயலாளர் பெ. சண்முகம்

சென்னை, டிச.19 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காகவே மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கக் கூடாது. அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது என்பது மக்களுக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், தங்களுக்குள்ள பெரும்பான்மையையும் பயன்படுத்தி கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றும் ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *