சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு கணினி, தையல் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படும் மேயர் பிரியா அறிவிப்பு

Viduthalai
2 Min Read

சென்னை,ஜன.1- சென்னை மாநகராட்சி சார்பில், பெண்களுக்கான கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மாமன்ற மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார்.

கல்விச் சுற்றுலா
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர்
ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் மறைந்த மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2 நிமிடங்கள் அமைதியாக இரங்கல் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் காசிமேடு, முல்லை நகர், மூலக்கொத்தளம், கீழ்ப்பாக்கம், வேலங்காடு, கிருஷ்ணாம்பேட்டை, மயிலாப்பூர், கண்ணம்மா பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட மயானங்களை ரூ.10 கோடியில் சீரமைக்கவும், தற்காலிக மழலைக் கல்வி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.16,150, ஆயாக்களுக்கு ரூ.10,450 ஆக உயர்த்தி வழங்கவும் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேசைகளை ரூ.5 கோடியில் டான்சியிடமிருந்து வாங்கவும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்களை ஊக்குவிக்க திருச்சி அய்அய்எம், என்அய்இடி ஆகியவற்றுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும், 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் சிறந்த தொழிற்சாலைகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாய்களை இனக்கட்டுப்பாடு செய்ய ஏற்கெனவே 5 இடங்களில் மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், அடையார் ஆகிய 5 மண்டலங்களில் தலா ஒரு நாய் இனக்கட்டுப்பாட்டு மய்யம் அமைக்கவும், அனுமதியின்றி நிறுவப்படும் இன்டர்நெட் சேவை நிறுவன கம்பம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், அனுமதி பெற்ற எண்ணிக்கையை விட அதிகமாக நிறுவினால் ஒவ்வொரு கம்பத்துக்கும் தலா ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவிக நகர் மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் பேசும்போது, “அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் தொடங்குவதற்கு முன் இனிவரும் காலங்களில் `முதல்வர் படைப்பகம்’ என்ற திட்டத்தின் பெயரையே சூட்டவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, கொளத்தூர் தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் வாழ்வாதாரம் உயர இலவச கணினி பயிற்சி, தையல் பயிற்சி பள்ளி ஆகிய திட்டங்களை தனது சொந்த செலவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். இதுபோன்ற பயிற்சிப் பள்ளிகள் துறைமுகம், சைதாப்பேட்டை தொகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.
கடற்கரையில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கான தொழுவங்கள் சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் உரிய இடங்களைக் கண்டறிந்து அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *