விலை கொடுத்து வாங்க முடியாத நம் கழகத் தோழர்களுக்குப் பாராட்டு!
‘‘உலகம் பெரியார் மயம்’’ என்பதை மூச்சுச் சொல்லாக்கி அதனைச் செயல்படுத்த புத்தாண்டில் உறுதி ஏற்போம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
கடந்த 2024 ஆம் ஆண்டில் நம் இயக்கப் பணிகள் சிறப்புற நடந்தேறியுள்ளன. அதற்காக எதையும் எதிர்பாராது உழைத்த தோழர்களுக்குப் பாராட்டு! ‘‘உலகம் பெரியார் மயம்‘‘ என்பதை மூச்சுச் சொல்லாக்கி செயல்படுத்திட புத்தாண்டில் உறுதிமொழியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எனது பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத்தி னர்களே,
தமிழ் உறவால் இணைந்துள்ள பகுத்தறிவாளர்களே,
இன உணர்வு, சமூகநீதி களப் பணித் தோழர்களே,
ஊடக நண்பர்களே, அன்புள்ளம் கொண்ட அறி வார்ந்த சான்றோர்ப் பெருமக்களே!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
நடைமுறையில் அதுதான் நமது வாழ்த்துப் பரிமாறிக் கொள்ள ஒரு வாய்ப்பு.
உலகம் முழுவதும் உள்ள வரலாற்று அடையாள நாளாக அது உள்ளது!
இன்று (1.1.2025) 2025 பிறந்துவிட்டது! காலமும், அலைகளும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை! கவனச் சிதறல்கள் இல்லா வாழ்வை – பொறுப்புடன் நடத்திட வேண்டும் என்பது நமது கடமைகளில் தலையாய ஒன்று.
தந்தை பெரியார் என்ற நமது அறிவாசான் நமக்குத் தந்த கொள்கை லட்சியப் பாதை – சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், பாலியல் நீதிகளை உள்ளடக்கிய சமூகநீதிப் பாதை!
கிழக்கு வெளுத்தது – சழக்குகள் சரிந்தன!
ஒரு நூறாண்டுக்குமுன் அந்தப் பகுத்தறிவுப் பகலவன் – ஒப்பாரும் மிக்காரும் இலாத அந்தத் தலைவர் நமக்கு ஒப்பற்ற கொள்கைகளை – இயக்கத்தைத் தந்து, அவர் உருவமாக இன்று இல்லாவிட்டாலும், தத்துவங்கள் தளராதப் போராட்டங்களாக, அறிவு விடுதலையை மானுடம் பெற நாம் அனைவரும் எந்தப் பேதத்திற்கும் இடந்தராது ஆற்றிய பணிகளால்,
கிழக்கு வெளுத்தது –
சழக்குகள் சரிந்தன!
மனம் பாராத, பதவி நோக்காத, நன்றி மறவாத உழைப்பை நாளும் தந்து நம்மை நாமே மனிதம் பொங்கும் மனிதர்களாக செதுக்கி, ஆக்கி வைத்துள்ளார் நம் தலைவர்!
2024–2025 ஆம் ஆண்டின் தனித்தன்மையான நமது பணிகள்!
2024 – 2025 ஆண்டு தனித்தன்மையாக, போராடிப் போராடி, மானுட சமூகத்தினை நிலைநாட்டிய தலை வரின் ஒப்பற்ற சுய சிந்தனையும், உண்மையான கொள்கை நெறியுமே, நாம் வரித்துக் கொண்ட அழியாதச் சொத்து, பாரம்பரிய சொத்து (The Great Legacy).
நம் பணி….?! கொள்கை வாழ்வு!
அந்த ஒப்பற்ற அறிவுக் கொள்கைச் சொத்தினை – உரிமைப் போராட்டங்கள்மூலமும், இடையறாத பரப்புரை (பிரச்சாரங்கள்) மூலமும், பாதுகாப்பதும், பரப்புவதும், களத்தில் விளைந்த வெற்றிகளை விதைப் பண்ணைகளாக்கி, விளைச்சல்களாக்கி வரும் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல, அய்யாவின் அருட்கொடை இதோ, அதனை எடுத்து அறிவுப்பசி தீர்க்கும் – மான வாழ்வுக்கும் உரிமை தாகமும் தீரும் வகையில் தொண்டை நமது இயக்கம் தீர்த்துவரும் பணியில் – அது எதிர்நீச்சல் ஆனாலும், மகிழ வாய்ப்பாக இருப்பினும், ‘குடிசெய்யும் நமக்கு இல்லை பருவம்‘ என்றே உழைத்து மகிழ்கிறோம்.
உலைக் கூடத்து இரும்புக்குப் பெருமையே, நெருப்பில் பழுத்து, காய்ச்சி, அடிமேல் அடி வாங்கி ஆயுதங்களாகி, பயனனுள்ள பணிக்கான ஆயுதங்களாக களங்காணத் தயாராவதுதானே!
கடந்த 2024 ஆம் ஆண்டில் பிரச்சாரப் பெருமழை! கண்ட களப் போராட்டங்கள், நூற்றாண்டு கொண்டாட்டங்கள், தொடர் பரப்புரைப் மக்களுக்கு நாளும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிற சளைக்காத இளம் வீரரர்களின் ஈடில்லா முயற்சிகள்! இவையெல்லாம் செயல்மலர்களாகப் பூத்துக் குலுங்கின! காய்த்துக் கனிகளாயின!
கனிய வேண்டியவையும் உண்டு!
அன்னை மணியம்மையாரின் ஆற்றல்மிகு தலைமை!
நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது ஆற்றல்மிகு தலைமை – அய்யா என்ற பெருந்தலைமையின் பயணம் முடிந்த நிலையிலும், அதையே தொடர்ந்தது போன்று நடந்த 5 ஆண்டு காலத்திலும், அதற்குப் பின்னரும், கொள்கைப் பரப்பு, நிறுவனப் பாதுகாப்பு, பிரச்சாரப் பொறுப்பு – நூல்கள் பரப்புதல், பகுத்தறிவு என்ற சுழன்றடிக்கும் சுயமரியாதைச் சூறாவளி, புதிய நாற்றங்கால்களை நமது திராவிட விதைப் பண்ணைக்கு வீரிய வித்துகள் நடவும், களை நீங்கிய பசுமைப் பயிர்களின் செழிப்பின்மூலம் விழிப்புற்ற மண்ணாக பெரியார் மண்ணைக் கட்டிக் காத்து வரும் எம் தோழர்கள், விழிமூடா காவல் பணியும், வழிதவறா கொள்கை வாழ்வும் மற்ற எவருக்கும் எடுத்துக்காட்டானவை!
நெஞ்சம் நிறைந்த பாராட்டு!
விலை கொடுத்து, நம்மில் எவரையும் வாங்க முடியாது – அணையா நெருப்புகளாகிய நம் தோழர்களின் கடும் பணி, சலிப்பில்லா சரித்திரப் பணியாக மிளிருகிறது!
எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்! நன்றி கலந்த வாழ்த்துகள்!
நமக்கு ‘‘ஊதியம்’’ எல்லாம் எது தெரியுமா, தோழர்களே?
(கடந்த ஆண்டு கழகப் பணிகளின் அணிவரிசையை பக்கம் 7 இல் காண்க).
அறுவடை செய்து, அனுபவித்து மகிழும் கொள்கை வெற்றிகளே! அய்யா தந்த அணையாத அறிவுச் சுடரை அடுத்தத் தலைமுறைக்கும், பல நூறாண்டுகளுக்கும் தரும் பணி எமது பெரும் பணி என்றே நிலை நிறுத்தும் பணி!
2024 ஆம் ஆண்டு இறுதியில், டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில், திருச்சியில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாடு மிகமிக சிறப்பான வரலாறு படைத்தது!
மாநில ப.க. பொறுப்பாளர்களான அதன் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன், தமிழ் பிரபாகரன், மாரி கருணாநிதி, மீனாட்சிசுந்தரம், மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒத்துழைத்த திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பொறுப்பாளர்களான கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், திருச்சி மலர்மன்னன், மதிவாணன், நாகம்மையார் குழந்தைகள் இல்ல விடுதிக் காப்பாளர் தங்காத்தாள், ப.க.வின் தொண்டறக் குழுவினர்கள், டாக்டர் செந்தாமரை உள்பட கல்வி நிறுவனங்களின் பகுத்தறிவாளர்களான முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள், நன்றி!
20 மாநில பேராளர்கள் (Delegates) நம்மிடம் பேசி, மனங்குளிர்ந்து, கொள்கை மழையில் நனைந்ததைப் பெரிதும் பாராட்டி நம்மிடம் கூறினர்.
‘‘பெரியாரை எங்கள் மாநிலத்தில் மேலும் பரப்பிடுவோம்’’ என்பதை நெகிழ்ந்து கூறி, மகிழ்ந்தனர்.
ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினை, இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் ஆட்சி யின் நீட்சிக்காக கண்களை இமை காக்கும் பணி – மற்றவர்களுக்காக அல்ல!
நம் கொள்கை லட்சியம் என்றைக்கும் மகுடம் தரித்து, ‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று மனித குலத்துக்குப் பறைசாற்றுவதே!
அப்பணி – தொடர் பணி நமக்கு!
தொய்வின்றி, அலுப்பு சலிப்பின்றிச் செய்து, அறிவு ஆசானின் கொள்கை வெற்றியைப் பறைசாற்றி, நாளும் ஓய்தல் இன்றி, ஓர் அணியில் நின்று, உட்பகை நுழையாத ‘கொள்கை லட்சிய வாழ்வே எம் வாழ்வு’ என்று காட்டிட, புதியதோர் சூளுரை எடுத்தும்,
உலகம் பெரியார் மயமாக
உழைப்போம்!
‘‘பெரியார் உலக மயம்
உலகம் பெரியார் மயம்’’ என்பதை மூச்சுச் சொல்லாக்கி, பேச்சு நடைமுறையாக்கி, வீச்சுச் செயல்முறையாக்கி செய்து முடிக்க, புத்தாண்டில் உறுதியேற்போம் – உழைத்து நிரூபிப்போம்!
வாரீர்! வாரீர்!! வாரீர்!!
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்கள் தொண்டன், தோழன்
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
1.1.2025