கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, டிச. 27 கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, ரூ.37 கோடியில் வள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையி லான கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
திருவள்ளுவர் சிலை
மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர், கன்னியாகுமரியில் திருவள் ளுவர் சிலையை கடந்த 2000-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, வரும் 30ஆம் தேதி முதல் ஜன.1-ஆம் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதையடுத்து, பள்ளி மாணவர் களுக்குக் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.அய் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ள இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு, எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் சிலை அருகே சீரொளிக் காட்சி 3டி லேசர் ஏற்பாடு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கண்ணாடி இழை பாலம்
இந்நிலையில், திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிகள், வரும் டிச.30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் தொடங்குகிறது. அப்போது, ரூ.37 கோடி செலவில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக் கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழாவில், திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்குகிறார். மாலை 7 மணிக்கு, சுகி.சிவம் தலைமையில் “திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே – சமுதாயத்துக்கே” எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
சிறப்பு மலர்
மறுநாள் டிச.31-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், அய்யன் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். உருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலரை வெளியிட்டு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து, பியானோ இசைக் கலைஞர் செல்வன் லிடியன் நாதஸ்வரத்தின் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு கலைஞர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகள் நடை பெறும். வருகிற 1ஆம் தேதி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, திருக்குறள் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்து நினைவுப் பரிசுகள் வழங்குகிறார்.