தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவு

viduthalai
3 Min Read

சென்னை,டிச.23- திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு எதிரொலியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

வெட்டிக்கொலை

திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் அருகே மாயாண்டி என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் காணொலியாக பரவியது. இக்கொலை நிகழ்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.

அதோடு மட்டும் அல்லாமல் காவல்துறை தரப்புக்கு பல கேள்விகளை எழுப்பி, நிகழ்வு குறித்தும், நீதிமன்றங்களில் உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், பணியில் இருக்கும் காவலர்கள் பலர் செல்பேசியில் மூழ்கிக் கிடக்கின்றனர். செல்பேசியில் ஏதாவது ஒரு காட்சியைப் பார்த்து அதில் மூழ்கி இருந்தால் எப்படி பாதுகாப்பு பணி நடைபெறும் என கேள்வி எழுப்பினர். அதோடு, காவலர்கள் செல்பேசியை பயன்படுத்துவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

அதோடு மட்டும் அல்லாமல், நீதிமன்றங் களில் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் வரை இடைக்காலமாக மாவட்ட நீதிமன்றங்களில், முக்கியமான இடங்களில், தேவையான எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள், மண்டல அய்ஜிக்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்ற வளாகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கு விசாரணைக்கு தொடர்பில்லாத நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என்பதை உன்னிப்பாக கண்காணிக்கவும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பிடிபட்டால் அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப் பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் கூறுகையில், “அதிகளவில் கூட்டம் வரும் நீதிமன்றங்களில் ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக துணை ஆய்வாளர் தகுதியில் உள்ள ஒருவர் உட்பட இருவர் நவீன துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

சென்னையில் பன்னாட்டு சிறு , குறுந் தொழில்கள் கண்காட்சி
27ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது

சென்னை, டிச.23- தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற பன்னாட்டுக் கண்காட்சி, சென்னையில் வரும் 27ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

பன்னாட்டுக் கண்காட்சி

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற பன்னாட்டுக் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் வரும் 27 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்பதுடன், 375-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெறுகிறது. இதற்காக, அரங்குகள் அமைக்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் ஒன்றிய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், கொச்சின் ஷிப்யார்டு, இந்திய விண்வெளி ஆய்வு மய்யம், தேசிய அனல்மின் கழகம், பிஇஎம்எல் மற்றும் ராணுவ துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை சிறு மற்றும் குறு நிறுவனங்களிடம் இருந்து அதிகளவில் பொருட்களை வாங்குகின்றன.
எனவே, இக்கண்காட்சியில் மேற்கண்ட நிறுவனங்களின் அதிகாரிகளை பங்கேற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டான்ஸ்டியா நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *