கேள்வி: தந்தை பெரியார் அவர்களுக்குக் கடைசியாக வந்த நோயின்போது தாங்கள் முதலிலிருந்தே உடன் இருந்தீர்கள் அல்லவா? அவருடைய கடைசி நாட்களைப் பற்றிக் கூறுங்களேன்.
டாக்டர்: தந்தை பெரியார் அவர்களுக்குக் கடைசியாக ஏற்பட்ட நோயின்போது நான் அவரது படுக்கை அருகிலேயே உடன் இருந்தேன். அதனால் அவரது கடைசி நாட்களைப்பற்றி நான் நன்கு அறிவேன். கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றோம்.
இவ்வாறு இடம் மாற்றியது அவரே விரும்பியதற்கிணங்கவே நடந்தது. தனது சொந்த சர்ஜனான டாக்டர் பட் தனக்குச் சிகிச்சை அளித்தால் நலமாக இருக்கும் என்று அவர் தம் விருப்பத்தைச் சொன்னார். உடனே அவ்வாறே இடமாற்றம் செய்யப்பட்டது.
தமது கடைசி நோயின்போது – தமது கடைசி நாட்களின்போது அவர் தமது நிதானத்தைக் கொஞ்சம் கூட இழக்கவில்லை. நோயில்லாத பிற நேரங்களில் அவர் எப்படி நிதானத்துடன் இருந்தாரோ அப்படியே இந்தக் கடைசி நாட்களிலும் அவர் இருந்தார். தம்மைப் பீடித்திருந்த நோயினைத் தாக்குப்பிடிப்பதில் அவர் கிஞ்சித்தும் தளர்ச்சி அடையவே இல்லை.
– ‘விடுதலை’ ஏட்டிற்கு
டாக்டர் ராமச்சந்திரா அளித்த பேட்டியிலிருந்து….