இயக்க மகளிர் சந்திப்பு (44) கொட்டாரக்குடி லெட்சுமி அம்மாள்! வி.சி.வில்வம்

viduthalai
6 Min Read

கொட்டாரக்குடி லெட்சுமி அம்மா

இயக்க மகளிரின் 44 ஆவது சந்திப்பிற்காக, நாகப்பட்டினம் மாவட்டம், கொட்டாரக்குடி லெட்சுமி அம்மாவைச் சந்திக்கச் சென்றோம்!
சோழங்கநல்லூரில் இருந்து தார்ச் சாலை, பிறகு குறுகலான சாலை, தொடர்ந்து கரடு முரடான பாதை, பின் வயல்வெளி வழியாக கொட்டாரக்குடி அடைந்தோம். அங்கே, அந்த வீட்டு வாசலில், இயக்க வீராங்கனை லெட்சுமி அம்மா அமர்ந்திருந்தார். அவருடன் ஒரு ஆடும், இரண்டு ஆட்டுக் குட்டிகளும் பேசிக் கொண்டிருந்தன.

அவரின் ஒளிப்படத்தைப் பாருங்கள்! எளிமையான தொண்டர்களைக் கொண்டது இந்த இயக்கம் என்பதற்கு, இதைவிட வேறொரு காட்சி வேண்டுமா? நேர்காணலில் அவர் என்ன சொன்னார் என்பதற்கு முன், நமது மகளிரின் பாதைகளைச் சற்று மீள் பார்வை செய்வோம்!

1) “இணையர் இறந்துவிட்டார், இருந்த 3 பிள்ளைகளும் மறைந்துவிட்டார்கள், நான் மட்டும்தான் மீதம் இருக்கிறேன்”, என்று சொன்ன அந்த விநாடி நாம் மூச்சிரைத்துப் போனோம்! தொடர்ந்து பேசுவதற்கே நிமிடங்கள் பல தேவைப்பட்டது. இந்த நிலையிலும் திருச்சி மாவட்டத்தின் எந்த ஒரு நிகழ்வையும் விட்டு வைக்காமல், பொது வாழ்க்கையே “கதியாய்” இருப்பவர் இவர். இரண்டு நாள்களுக்கு முன்பு கூட, தோழர்களை அழைத்து, பெரியார் உலகத்திற்கு ரூ.1000 கொடுத்துள்ளார். சொந்த வாழ்க்கையில் இவ்வளவு வலிகளுக்குப் பிறகும், கொள்கை வழியைப் பின்பற்றும் இதுபோன்ற மகளிரை வேறெங்காவது நாம் கண்டதுண்டா? 82 வயதான அந்த வீர மங்கையின் பெயர் பி.என்.ஆர்.அரங்கநாயகி!

2) திருமணம் முடிந்த 37 ஆவது நாளில் இணையர் இறந்துவிடுகிறார். சமூக வாழ்விலும், பொருளாதார வாழ்விலும் சொல்லொணா துயரங்கள். இந்தச் சூழலில் பெரியார் சிந்தனையின், பெரும் புரட்சிக்காரன் பழனியப்பன் வருகிறார். மறுமணம் செய்து கொள்கிறார். இது நடந்தது 52 ஆண்டுகளுக்கு முன்னால் 1972இல், அதுவும் சிறு கிராமத்தில்! இப்படியான வாழ்க்கைச் சூழலில் அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பதை நேர்காணலில் படித்திருப்பீர்கள். தற்போது 74 வயதாகும் கலைமணி அம்மாதான் அவர்கள்!

3) “என்னது பெரியார் சிலையைக் காலால் உதைத்து இடிப்பாயா?”, எனக் கோபம் கொண்டு, பக்கத்தில் கிடந்த அரிவாளை எடுத்துக் கொண்டு போன நெஞ்சுரத்தின் மறுபெயரே இவர்! வீரத்தின் அடையாளமாக, மதுரை அவனியாபுரத்தில் இவரின் பெயரைக் கூறிக் கொண்டு நிற்கிறார் தந்தை பெரியார். ஆமாம்! 59 வயதாகிறது இவருக்கு! இரவு 2 மணிக்கும் ஒரு மகளிர் சாலையில் கழகச் சுவரொட்டி ஒட்டுகிறார் என்றால், அவர் பெயர்தான் ராக்கு தங்கம் என்றறிக!

4) சிறு வயதிலேயே இந்தப் பெண்ணைக் “கருப்புச் சட்டை” என்றே அழைப்பார்கள். மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியைத் தனியொரு பெண்ணாக, தமிழ்நாடு முழுவதும் நடத்தியவர். திருச்சி, மத்தியப் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலை திறப்பின் போதும் இவரே நிகழ்ச்சி செய்துள்ளார். பல ஊர்களிலும், பல பிரச்சினைகளைச் சந்தித்து, கொள்கையைப் பரப்பியுள்ளார். இன்னமும் நிகழ்ச்சியில் பங்கேற்பதைத் தம் கடமையாகக் கொண்டுள்ளார் திருவலஞ்சுழி ஜெயமணி (79) அவர்கள்!

5) இரண்டு பிள்ளைகள் பிறந்ததும் இறந்துவிட, ஒரு பிள்ளை 9 வயதில் இறந்துவிட்டார். எனினும் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தில் இருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் இவர் கால்படாத கிராமமே இல்லை என்று சொல்லுமளவு, சுற்றிச் சுழன்றி பணி செய்துள்ளார். இன்றைக்கும் தம் கிராமத்தில் கோயிலுக்கு வரி செலுத்தாத தனியொரு மகளிராக வலம் வருகிறார். கடலூர், வேலூர், பாளையங்கோட்டை, மதுரையெல்லாம் சென்றுள்ளார். எதற்கு? சிறைச்சாலைக்கு!
கொள்கைத் தெளிவும், அதுதரும் உறுதியும்தான் இவர்களை எல்லாம் இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆம்! நாம் பேசிக் கொண்டிருப்பது அம்மா குருக்கத்தி கமலம் (61) அவர்களை!

6) 50 ஆண்டுகளுக்கு முன்பே முதுகலை வரலாறு படித்தவர். சோழன் போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகத்தில் பணிபுரிந்தவர். பார்ப்பனர்களின் வழக்கமான மிரட்டலின் போது, ஆமாம்! “நான் பெரியாரிஸ்ட்தான்” எனத் தனித்து நின்றும், துணிந்து நின்றும் வெற்றி பெற்றவர். கணவரை இழந்த கைம்பெண்ணை, தம் இணையராக ஏற்கத் தயங்காதவர்கள் பெரியாரிஸ்ட்! அதேநேரம் மனைவியை இழந்த மனிதரை, அதுவும் 9, 7, 3 வயதுடைய குழந்தைகளோடு திருமணம் செய்து கொண்டவர். அதன் பிறகு எப்படியான வாழ்வை அவர் வாழ்ந்தார் என்பதை 25.05.2024 ஞாயிறு மலரில் நீங்கள் படித்திருப்பீர்கள்! புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், நான் கூட்டங்களுக்கு வந்தே தீருவேன் என்கிற மகளிரை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? ஆமாம்! இவர்கள் எல்லாம் நம் இயக்கத்தில் தான் இருப்பார்கள். இவர் பெயர் வள்ளியம்மை, வயது 71.

7) திருமணம் ஆன 6 ஆவது ஆண்டில் இணையர் மறைவு! கையில் 3 பிள்ளைகள்! “அய்யோ இப்படி ஆகிவிட்டதே” எனக் கதறிய கிராமம், சில மாதங்களில் விதவை என்றும், அபசகுனம் என்றும் ஒதுக்கிவிட்டது. “நீங்க ஒதுக்குனா ஒடுங்கிப் போக நானொன்றும் சராசரிப் பெண்ணல்ல; பெரியாரின் சிங்கப்பெண்” என எழுந்து, இன்று கம்பீரமாய் வலம் வருபவர்தான் நெடுவாக்கோட்டை ஜெயமணி (72) அவர்கள்!

8) திருவாரூரில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்றதால் 15 மகளிர், 15 நாட்களுக்கு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.. விடுதலையாகும் போது, “இது தேவையா?”, என்கிற ரீதியில் நீதிபதி கேட்க, “ஆம் இது சமூகத்திற்குத் தேவைதான்” என நம் மகளிர் கூற, மீண்டும் 15 நாள் வேலூர் சிறையில் அடைத்துவிட்டார் நீதிபதி. அப்படி 30 நாட்கள் சிறையில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். தமிழ்நாட்டில் எங்கு பெரு நிகழ்ச்சிகள் என்றாலும் இவரைப் பார்த்துவிடலாம். ஆம்! திருவாதிரைமங்கலம் மகேஸ்வரிதான் அவர்!

9) சட்ட எரிப்புப் போரில் தந்தை சிறையில் இருக்கிறார்.‌ அங்கேயே தன் மகளுக்கு இணையரையும் முடிவு செய்கிறார். மகள் ஒடுக்கப்பட்ட ஜாதி, மாப்பிள்ளை இடைநிலை ஜாதி. இதுபோன்ற எண்ணற்ற “ஜாதி ஒழித்த” திருமணங்கள் திராவிடர் கழகத்தில் நடந்து உள்ளன. பார்வை இழப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் வரை விடுதலை நாளிதழைப் படிப்பகம் சென்று படித்து வந்தவர். அந்த இளம் மகளிரின் பெயர் லீலா, வயது 80.

10) சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று வேலூரில் 3 மாதங்கள் சிறையில் இருந்தவர். அப்போது கருவுற்ற நிலையில் இருந்தார். விடுதலை ஆனதும் அன்னை மணியம்மையார் தன்னுடன் 3 மாதங்கள் தங்க வைத்துக் கொண்டார். காரணம் இவரது இணையருக்குச் சென்னை மத்தியச் சிறையில் 9 மாதங்கள் தண்டனை.

மிசா காலத்தில் இணையரைத் தேடி வந்த காவலர்கள், விசாரணைக்கு இவரை அழைத்துப் போய்விட்டார்கள். அவரின் பெயர் எம்.எஸ்.வள்ளியம்மாள் (86)

43 மகளிரை நேர்காணல் செய்ததில், 10 பேரின் சிறு குறிப்புதான் இங்கே மேற்கோள் காட்டப்பட்டவை. சரி… “இவர்களைக் குறித்தெல்லாம் இருக்கிறது. இந்தப் பேட்டியின் தலைப்பு, ‘கொட்டாரக்குடி லெட்சுமி அம்மாள்’ என்று உள்ளதே… அவரைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது…. அவர் சொன்ன ஒரு வார்த்தை இருக்கிறது. திரும்பத் திரும்ப சொன்ன அந்த ஒரே ஒரு வார்த்தை மட்டும் இருக்கிறது!

அதேநேரம் நம்மை யாரென்றே தெரியாவிட்டாலும், நமது அடையாளமான “கருப்பு சட்டையைப்” பார்த்ததும் முகத்தில் அப்படி ஒரு ஒளி!
உடனே கையெடுத்துக் கும்பிட்டார். அருகில் அமர்ந்தோம், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வயது 85 – அய் தாண்டியிருக்கும். நினைவுகள் எல்லாம் மறந்து போய்விட்டது. ஒன்றே ஒன்றுதான் சொன்னார். “நான் இறந்ததும் எல்லோரும் வந்துருங்க, நம்ம முறைப்படி புதைக்கணும்”. “நான் இறந்ததும் எல்லோரும் வந்துருங்க, நம்ம முறைப்படி புதைக்கணும்…”

இந்த ஒன்றைத்தான் அவர் முழுப் பேட்டியிலும் கூறினார். சிரித்த முகம் மாறவில்லை; கும்பிட்ட கைகள் கீழே இறங்கவில்லை! இப்படி கண்ணீர் சிந்தும் காட்சிகளும், கவலை கொண்ட வாழ்க்கையும் கொண்டதே நம் இயக்க மகளிர் வரலாறு! அதன் விளைவாகவே இன்றைக்குத் தமிழ்நாட்டுப் பெண்கள் வாழ்வு பூத்துக் குலுங்குகிறது! பூத்துக் குலுங்கும் அந்த மரத்தின் வேர்களாக இருப்பவர்களே கொட்டாரக்குடி லெட்சுமி அம்மாக்கள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *