தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா (2.12.2024) நேரிலும், இணையத்திலும்

Viduthalai
5 Min Read

மதுரை, டிச. 15- “பெரியாரைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்கள்” எனக்கருதி வாழும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா கடும் புயல் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர் சந்திப்புதான் இல்லாமல் போனது,அவரைப் பற்றி ,அவரின் உழைப்பு,பெருமைகள், நாணயம்,சட்ட அறிவு, பிரச்சினைகளில் முடிவெடுக்கும் பாங்கு – இப்படி அவரின் பரிமாணங்களைப் பற்றிப் பேசுவதற்கு, தடையில்லையே எனக்கருதிய மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகமும் மதுரை சிந்தனை மேடையும் இணைந்து ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை இணையவழியாகக் கொண்டாடுவது என்று டிச. 1ஆம் தேதி உடனடியாக முடிவு செய்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே. செல்வம் ஏற்பாட்டில் ஜூம் வழியாக ஆசிரியர் அவர்களுடைய பிறந்தநாள் டிசம்பர் 2ஆம் தேதி மாலை 6:00 மணி அளவில் கொண்டாடப்பட்டது.

இணையவழிக் கூட்டத்தில் பங் கேற்ற அனைவரையும் வரவேற்று நிகழ்வின் நோக்கத்தினை விளக்கித் தலைமைக் கழக அமைப்பாளர் வே. செல்வம் உரையாற்றினார். நிகழ்வின் இணைப்புரையை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் வழங்கினார். நிகழ்விற்கு சிந்தனை மேடை அமைப்பின் தலைவர் உளவியல் வல்லுநர் ஜே வெண்ணிலா வரவேற்பு உரையாற்றி ஆசிரியர் அவர்களுடைய வாழ்வியல் சிந்தனைகளால் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிட்டு சிறப்பான ஒரு தொடக்கத்தை அளித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஆசிரியர் அவர்களுடைய 92ஆவது பிறந்தநாள் இன்று. .நம்முடைய உள்ளமெல்லாம் மகிழ்ச்சியிலே துள்ளுகிறது. அவர் ஆற்றுகின்ற பணி, அவர் செய்யும் தொண்டு நமக்கு பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அவருடைய தலைமையை ஏற்று அவருடைய தொண்டராய்த் தொடர்வதே வாழ்வின் மிகப்பெரும் பேறு என்று குறிப்பிட்டு ஆசிரியர் அவர்களுடைய பல்வேறு சிறப்புகளைக் கூறி தோழர்களை உற்சாகப்படுத்தி தொடக்க உரையாற்றினார்.

பெரியாருடைய கொள்கையின் வழியில்
நிகழ்விற்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தினுடைய மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய உரையில், 1983 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தன்னுடைய பேராசிரியர் கி.ஆழ்வார் மூலமாகப் பெரியார் பட்டய சான்றிதழ் வகுப்பு சேர்ந்ததையும் அப்போதுதான் முதன் முதலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை நேரில் பார்த்தது, அவருடைய உரையை நேரில் கேட்டதையும் குறிப்பிட்டார். அதற்குப் பின்னால் ஆசிரியர் அவர்களுடைய தலைமையில் திருமணம், அவருடைய தலைமையில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அமைப்புகளில் மாநில பொறுப்புகளை ஏற்று செயல்பட வாய்ப்பு கிடைத்ததைக் குறிப்பிட்டார். தந்தை பெரியாரை நேரில் பார்க்காத தான் தந்தை பெரியாருடைய கொள்கையின் வழியில் நடப்பதற்கு, அவருடைய கொள்கைகளை பரப்புரை செய்வதற்கு ஆசிரியர் தான் காரணம். அவரின் மூலமாகவே வழியாகவே தந்தை பெரியாரை, தந்தை பெரியாரின் கொள் கைகளை உணர்ந்தேன் என்று குறிப்பிட்டார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆசிரியர் அவர்களுடைய தலைமை ஏற்று அவரின் கட்டளைகளை நிறைவேற்றுவதே தன்னுடைய வாழ்நாள்பணி. ,அதுவே மகிழ்ச்சியான பணி என்று குறிப்பிட்டு நிகழ்ச் சியை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய மதுரை வே. செல்வம் உள்ளிட்ட தோழர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து மாநில கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி ‘தமிழர் தலைவரின் பரிணாமங்கள்‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தன்னுடைய உரையில், “இதில் கலந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் என்னுடைய வயதிற்கு மேலே ஆசிரியர் அவர்களோடு பழகிக் கொண்டிருப்பவர்கள். அவருடைய தலைமைக்குக் கீழ் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். இருந்தாலும் என்னை அழைத்து ஆசிரியர் அவர்கள் பற்றி பேசச் சொல்லி இருக்கிறீர்கள். அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தனையோ கட்சிகள் நாட்டில் இருக்கின்றன. எத்தனையோ தலைவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் பொது வாழ்க்கையில் உண்மைக்கு, நேர்மைக்கு, ஒழுக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது நம் ஆசிரியர் அவர்கள்தான். தலைமைப் பண்புகளைப் பற்றி தனக்கு 25 வயது ஆகும்போது ஆசிரியர் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதி இருக்கின்றார். அதிலே குறிப்பிட்டு இருக்கக் கூடிய அத்தனை தலைமைப் பண்புகளும் தந்தை பெரியாருக்கு எப்படி பொருந்துகிறதோ அதுபோல ஆசிரியர் அவர்களுக்கும் பொருந்துகிறது” என்று சொல்லி அந்த ஒவ்வொரு தலைமை பண்பையும் குறிப்பிட்டு அது எப்படி ஆசிரியர் அவர்களுக்குப் பொருந்துகிறது என்பதை விளக்கி மிக விரிவாக சிறப்புரையாற்றினார்.

எங்கள் வாழ்வில் தமிழர் தலைவர்
தொடர்ந்து “எங்கள் வாழ்வில் தமிழர் தலைவர்” என்ற தலைப்பில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக,பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர்கள் உரையாற்றினர். இந்தத் தலைப்பில் ஒரு தனிப் புத்தகமாகப் போடக்கூடிய அளவிற்கு, பேசிய ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பங்களிப்பை, நேரடியான, மறைமுகமான பங்களிப்பை மிக நெகிழ்ச்சியுடன் அவையில் எடுத்து வைத்தனர்.

நெல்லை மாவட்ட கழகத் தலைவர் ச.ராஜேந்திரன், தென்காசி மாவட்ட கழகக் காப்பாளர் டேவிட் செல்லதுரை, தலைமைக் கழக அமைப்பாளர் திண்டுக்கல் வீரபாண்டி, தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம், மதுரை மாநகர் மாவட்ட கழகத்தலைவர் அ.முருகானந்தம், அ.வேல்முருகன், பஹ்ரைன் சிவக்குமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத்தலைவர் திருப்பத்தூர் ம.கவிதா, மதுரை வழக்குரைஞர் இராம.வைரமுத்து உள்ளிட்ட பலர் தங்கள் அனுபவங்களை ஆசிரியரோடு பேசிய நாள்களை, அவரால் தாங்கள் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய பெருமைகளை, நல்ல பெயரினை, தங்கள் வாழ்வில் மிக உவப்பாக நடந்த நிகழ்வுகள், தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் ஆசிரியர் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள்.மிகுந்த மகிழ்ச்சியாகவும் எழுச்சியாகவும் தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எப்படித் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையும், ஆசிரியர் வழிகாட்டுதலும் அடிப்படையாக அமைந்தன என்பதை மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள். ஆசிரியர் அவர்களுடைய பிறந்தநாளை அவருக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக, தங்கள் வெற்றிக்கு பாதை காட்டியவரின் நாளாக அமைத்துக்கொண்டு உரையாற்றினர்.

இறுதியில் மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் இரா.லீ.சுரேஷ் நன்றியுரை கூறினார். ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆசிரியர் அவர்களுடைய பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக அமைந்தது பங்கேற்ற ஒவ்வொரு தோழருக்கும் மனதிற்கு நிறைவாக அமைந்தது.

சுயமரியாதை நாள் விழா
மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக மதுரை பெரியார் மய்யத்தில் ஆசிரியர் 92ஆம் ஆண்டு பிறந்த தின விழா 02.12.2024 அன்று காலை 11 மணியளவில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காப்பாளர் தே.எடிசன்ராசா கேக் வெட்டி தோழர்கள் அனைவருக்கும் அளித்தார்.தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா நேரு ஆகியோர் உரையாற்றினர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் சுப.முருகானந்தம், மதுரை மாவட்ட காப்பாளர் சே முனியசாமி மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேஷ் மாவட்டத் துணைச் செயலாளர் தனுஷ்கோடி, மாவட்ட துணை தலைவர் நா. முருகேசன், பழனி ஆறுமுகம் திரையரங்கு உரிமையாளர் மோகனசுந்தரம், எல்.அய்.சி.மோதிலால், சுப்பையா, காசி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கீழமாசி வீதிகளில் நின்று தோழர்கள் அந்தப் பகுதி உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *