புதுச்சேரி, டிச.15 புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயண சாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று (14.12.2024) செய்தியாளர் களிடம் கூறியதாவது: தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ. கூட்டணி பெரும்பான்மையை இழந் திருக்கிறது. பாஜ மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். அவரை முதலமைச்சர் ஆக்குவதுதான் எங்களது குறிக்கோள் எனக் கூறியுள்ளனர்.
பாஜ மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரில் மூன்று பேர் ஆதரவு மட்டும்தான் இந்த அரசுக்கு உள்ளது. சட்டமன்றத்தில் என் ஆர் காங்கிரஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் என 3 பேர் கூறிக் கொண்டாலும் இந்த ஆட்சிக்கு முத்தியால்பேட்டை, திருநள்ளாறு, உருளையன்பேட்டை தொகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி ஆதரவு கடிதம் கொடுக்கவில்லை. அதன்படி பார்த்தால் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு என் ஆர் காங்கிரசின் 10 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜவில் உள்ள இரண்டு அமைச்சர்கள், ஒரு சட்ட பேரவை தலைவர் என மூன்று பேர் ஆதரவுடன் மற்றும் 2 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் என 15 பேர் மட்டுமே ஆதரவு தருகின்றனர். ஆனால் ஆட்சிக்கு வெளியே 18 பேர் உள்ளனர். எனவே இந்த அரசு பெரும்பான்மை இழந்து இருக்கிறது. பெரும்பான்மை இழந்து விட்டதால் முதலமைச்சர் ரங்கசாமி, பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.