மணிப்பூர் கலவரம் : இழக்கப்பட்ட சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

viduthalai
1 Min Read

இம்பால், டிச.10 மணிப்பூர் இனக் கலவரத்தில் எரிக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்து விவரத்தை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி மைத்தேயி, குகி சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் கலவரமாக மாறியதில் இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது.

இதற்கிடையில் மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்குவதை மேற்பார் வையிட உயர் நீதிமன்ற மேனாள் பெண் நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. மேலும் கிரிமினல் வழக்குகளில் விசாரணையை கண்காணிக்குமாறு மகாராட்டிர மேனாள் காவல்துறை தலைவர் தத்தாத்ரே பத்சல்கிகரை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் மணிப்பூர் கல வரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 9.12.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கலவரத்தின்போது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எரிக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துகள் குறித்த விவரத்தை ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் குற்றவாளிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தை வழங்கவும் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜனவரி
20-ஆம் தேதி தொடங்கும் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *