சென்னை,நவ.25 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு, நவ. 26ஆம் தேதி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசமைப்புச் சட்டமாகும்.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்பின் முகப்புரை
1947ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசமைப்பின் முகப்புரை அமைந்துள்ளது.
1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டது.
இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, 1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசமைப்புப் பேரவையில், முழுமையான ஆதரவோடு, இந்திய அரசமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
இறையாண்மை – முழுவதும் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, யாருக்கும் உட்படாத தன்மை; மேலும் இதற்கு மேல் உயர்ந்த அமைப்பு இல்லை.
சமதர்மம் – இவ்வாசகம் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தம் வாயிலாக அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.
மதச்சார்பின்மை – 42-ஆவது சட்டத் திருத்தம் (1976) மூலம் முகப்புரையில் சேர்க்கப்பட்டது. (பிரிவு 25 – 28)மக்களாட்சி – மார்க்சியம் மற்றும் காந்திய சமதர்ம கொள்கைகளை கொண்டது.
நீதி – சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதி உரிமை, சுதந்திரம் – சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாடு சமத்துவம் – தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சகோதரத்துவம் – தனி ஒருவரின் மாண்பிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும்.
முகப்புரையின் முக்கியத்துவம் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது சட்டத் திருத்தம்,“சமதர்மம், சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு” ஆகிய மூன்று சொற்களை முகப்புரையில் சேர்த்தது.