பாட்னா, நவ. 11- பீகார் மாநிலம் பரோனி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, ரயில்வே ஊழியர் ஒருவர் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இது தொடர்பான ஒளிப் படங்களும், காட்சிப் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில்வே துறையில் போதிய ஆட்சேர்ப்பு நடைபெறாததே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சாமானியர்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் மோடி அவர்களே? நீங்கள் அதானியை மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சிக்கிறீர்கள். இந்திய ரயில்வேயின் நீண்ட கால அலட்சியம், புறக்கணிப்பு மற்றும் போதிய ஆட்சேர்ப்பு நடைபெறாதது ஆகியவற்றின் விளைவுதான் இந்த பயங்கரமான விபத்து” என்று பதிவிட்டுள்ளார்.
வாக்கி டாக்கி பழுது
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒடிசாவில் மிகவும் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது இதில் 250க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 60க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்தனர். இந்த விபத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் வாக்கி டாக்கி சரிவர செயல்படாதது முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
ஒரு ஆண்டு கழித்தும் ரயில்வேத்துறை பழுதான வாக்கிடாக்கிகளை மாற்றாமல் விட்டதால் மேலும் மோசமான ஓர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.