மும்பை, நவ.11 நிகழாண்டில் அசாதாரண தட்பவெப்ப நிலை பாதிப்பு நாள்களின் எண்ணிக்கை 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 176 நாள்கள் அசாதாரண தட்பவெப்பநிலை நிலவியுள்ளது. கருநாடகம், கேரளம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் அசாதாரண தட்பவெப்ப நிலை பாதிப்பு நாள்களின் எண்ணிக்கை 40-க்கும் அதிகமாக கூடுதலாகியுள்ளன.
அசாதாரண தட்பவெப்ப நிலையால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை 550 நபர்கள் உயிரிழப்புடன் கேரளம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம் (353 உயிரிழப்புகள்), அசாம் (256 உயிரிழப்புகள்) உள்ளன.
அசாதாரண தட்பவெப்பநிலை தாக்கத்தால் 85,806 வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதத்துடன் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.பயிர்ச் சேதத்தைப் பொறுத்தவரை 60 சதவீத சேதத்துடன் மகாராட் டிரம் முதலிடத்திலும், மத்தியப் பிரதேசம் 25,170 ஹெக்டேர் பாதிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மேலும், 2024-ஆம் ஆண்டில் பல்வேறு விதமான தட்பவெப்பநிலைகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, வறண்ட வானிலையைப் பொறுத்த வரை கடந்த 1901-ஆம் ஆண்டு முதல் பதிவானதில் 9-ஆவது வறண்ட மாதமாக ஜனவரி மாதம் இருந்துள்ளது.
பிப்ரவரி மாதம், கடந்த 123 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது குறைந்த வெப்பநிலை பதிவான மாதமாகும்.அதுபோல, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களைப் பொருத்தவரை கடந்த 1901-ஆம் ஆண்டு முதல் இதே மாதங்களில் பதிவான தட்பவெப்பநிலையைக் காட்டிலும் குறைந்த தட்பவெப்பநிலை பதிவாகியுள்ளது. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை 1,376 பேர் வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 1,021 பேர் மின்னல் தாக்கியும், புயல் தாக்கியும் உயிரிழந்துள்ளனர்.