படம் எடுத்த தோழரின் கைப்பேசியைப் பறித்த திமிர்!
அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
சிதம்பரம், அக்.9 சிதம்பரம் கோவிலுக்குள் தீட்சிதப் பார்ப்பனர்கள் கிரிக்கெட் விளையாடியதைப் படம் பிடித்த வி.சி.க. தொண்டரிடம், தீட்சிதர்கள், ‘‘இது எங்கள் கோவில்; எங்கள் அனுமதியில்லாமல் நுழையக் கூடாது; படம் எடுக்கக் கூடாது‘‘ என்று கையைப் பிடித்துத் திருகி, ‘கைப்பேசியை‘ பறித்துள்ளனர்.
இதுகுறித்த செய்தி விவரம் வருமாறு:
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, வல்லம் படுகை செயலாளராக உள்ள இளையராஜா என்பவர் சென்றபொழுது, அங்கே தீட்சிதர்கள் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைத் தன் கைப்பேசியால் படமெடுத்தார்.
அப்பொழுது அங்கே வந்த தீட்சிதர்கள், ‘‘ஏன் படமெடுத்தாய்? யார் சொல்லிப் படமெடுத்தாய்? இது எங்கள் கோவில்’’ என்று சொல்லி, இளையராஜாவின் கையைப் பிடித்து முறுக்கி, கைப்பேசியைப் பறித்துக் கொண்டதோடு அல்லாமல், இழிவான வார்த்தைகளைக் கூறி, அவரது நெஞ்சில் குத்தியுள்ளனர்.
இதனால் காயமுற்ற இளையராஜா, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டு, பின்னர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
காவல்துறையினர் வழக்குப் பதிந்து, 5 தீட்சிதர்களைக் கைது செய்யக் கோரி, சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகில் நேற்று (8.10.2024) மாலை 6 மணிக்கு மாவட்ட வி.சி.க. செயலாளர் அரங்க.தமிழ்ஒளி தலைமையில் அனைத்துக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், நகர கழக செயலாளர் இரா.பொய்யாமொழி, நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.மக்கீன், பக்தர்கள் பேரவைத் தலைவர் ஜெமினி ராதா, சி.பி.எம். நகர செயலாளர் எஸ்.இராசா, மனிதநேய மக்கள் கட்சி அன்சாரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சம்பத்குமார், வி.சி.க. மேனாள் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, வி.சி.க. ஊடகப் பிரிவு செயலாளர் குறிஞ்சிவேந்தன், வி.சி.க. நகர செயலாளர் ஆதிமூலம் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.