தரவுகள் தெரிவிப்பதென்ன?

Viduthalai
3 Min Read

அரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் பா.ஜ.க. படுதோல்வி அடையும்!

புதுடில்லி, அக்.6 சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள அரியானாவில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காஷ்மீரிலும் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்ப தாகவும் தெரியவந்துள்ளது.
அரியானா, காஷ்மீர் மாநில சட்டப்பேர வைகளுக்கான தேர்தல் தேதியை கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக நடத்தப்பட்டது. 10 ஆண்டுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டதாலும், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதாலும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
தேர்தலையொட்டி, 400 கம்பெனி பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவம், காவல்துறையினர் குவிக்கப்பட்ட னர். செப்.18, செப்.25, அக்.1 என மூன்று கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
இத்தேர்தலில், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்தும், பா.ஜ.க. தனித்தும் போட்டியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அரியானாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பா.ஜ. ஆட்சி செய்து வருகிறது. அங்கு தற்போது முதலமைச்சராக நயாப் சிங் சைனி உள்ளார். இங்கு பா.ஜ.க., காங்கிரஸ் தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பிஎஸ்பி, ஜேஜேபி-ஆசாத் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பா.ஜ.க.வின் தொடர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் செய்தது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா உள்ளிட்ட தலை வர்கள் அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளிப் பிரச்சாரம் செய்தனர். மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் மொத்தம் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு நேற்று (5.10.2024) வாக்குப்பதிவு நடந்தது. அரியானா, காஷ்மீரில் பதிவான வாக்குகள் 8.10.2024 அன்று எண்ணப்படுகின்றன.

அரியானாவில் நேற்று (5.10.2024) மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த தையடுத்து, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அரியானாவை பொறுத்த வரை அங்கு தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்தும் மறுப்பு தெரிவித்து தனியாக போட்டியிட்ட ஆம்ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் தெரியவந்துள்ளது.

அரியானா தேர்தலில் நடத்தப்பட்ட 7 கருத்துக் கணிப்பு களும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதை கணித்துள்ளன. அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஆளும் பாஜ படுதோல்வி அடையும் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளன. காங்கிரஸ் 51 முதல் 61 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பா.ஜ.க.வுக்கு 27 முதல் 35 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று ‘ரிபப்ளிக்‘ டிவி கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இந்திய தேசிய லோக் தளத்துக்கு 3 முதல் 6 தொகுதிகள் கிடைக்கும். அரியானாவில் வாக்குப்பதிவுக்கு பின் நடத்தப்பட்ட 7 கருத்துகணிப்புகளில் சரா சரியாக காங்கிரசுக்கு 54 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகளும், இந்திய தேசிய லோக் தளத்துக்கு 3 இடங்களும், இதர கட்சிகளுக்கு 6 தொகுதிகளும் கிடைக்கும். இங்கு ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை.காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

‘பீப்பிள்ஸ் பல்ஸ்’
‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த கூட்டணிக்கு 46 முதல் 50 தொகுதிகள் கிடைக்கும் என்றும், பா.ஜ.க.வுக்கு 23 முதல் 27 தொகுதிகளும், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 7 முதல் 11 இடங்களும் இதர கட்சிகளுக்கு 4 முதல் 6 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பின் படி காங்கிரஸ் கூட்டணிக்கு 40 முதல் 48 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 27 முதல் 32 இடங்களும், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 6 முதல் 12 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
ஆனால், தைனிக் பாஸ்கர் மட்டும் காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சமாக 40 இடங்கள் தான் கிடைக்கும் என்றும், பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள் கிடைக்கும் என்று இதர கட்சிகளுக்கு 18 தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *