தெரிந்துகொள்வீர்! இன்பத்தமிழ்… இப்படியும் அப்படியும்!

viduthalai
2 Min Read

1. அந்தி, சந்தி:

அந்தி : மாலை நேரத்திற்கும், இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
சந்தி: இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

2. அக்குவேர், ஆணிவேர்

அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.
ஆணி வேர் : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

3. அரை, குறை

அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.
குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

4. அக்கம், பக்கம்

அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.
பக்கம்: பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

5. அலுப்பு, சலிப்பு

அலுப்பு: உடலில் உண்டாகும் வலி.
சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.

6. ஆட்டம், பாட்டம்

ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.
பாட்டம் : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.

7. இசகு, பிசகு:

இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.
பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.

8. இடக்கு, முடக்கு

இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.
முடக்கு : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.

9. ஏட்டிக்குப் போட்டி

ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்)
போட்டி : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.

10. ஒட்டு, உறவு

ஒட்டு : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.
உறவு : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.

11. கடை, கண்ணி

கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.
கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.

12. கார – சாரம்

காரம் : உறைப்பு சுவையுள்ளது.
சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது.

13. காடு, கரை

காடு : மேட்டு நிலம் (முல்லை).
கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).

14. ‘கா’வும் – ‘கழனி’யும்

கா : சோலை.
கழனி: வயல். (மருதம் ).

15. கிண்டலும் – கேலியும்

கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.
கேலி : எள்ளி நகைப்பது.

– முகிலன், சென்னை – 14

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *