இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர், நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தன்னு டைய முத்திரையைப் பதித் துக்கொண்டிருந்த வாழ்நாள் போராளியான கொள்கை வீரர், அருமைத் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் இயற்கை எய்தினார் (12.9.2024) என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதாக அமைந்திருக்கிறது. அவர் சென்னையிலே படித்தவர். பலநேரங்களில் நம்முடன் தமிழில் உரையாடியவர். கொள்கைப் பயணத்திலே ஒன்றாகப் பயணித்தவர். அப்படிப்பட்ட ஓர் அரிய மாவீரர் மறைந்தார் என்பதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயற்கையின் கோணல் புத்தி என்று தந்தை பெரியார் சொல்லுவார். அப்படிப்பட்ட உணர்வுகள். அதுவும் ஜனநாயகம் முட்டுச்சந்திலே மாட்டிக் கொண்டிருக்கக் கூடிய இந்த காலகட்டத்திலே, அதை எதிர்த்துப் போர்த் தளபதி களில் ஒருவராக போர்க்களத்திலே களமாடினார். அப்படிப் பட்ட ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பென்றாலும் எதிர் கொள்வோம்.
அவர் நினைத்த ஒரு புதிய பொதுவுடமை, சமதர்மச் சமுதாயத்தைப் படைக்க நாம் ஒன்றுபட்டுப் பாடுபட்டு வென்று காட்டுவோம். அதுதான் அவருக்கு நாம் சூட்டுகின்ற காணிக்கை மாலையாகும்.
அவருடைய பிரிவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், கொள்கைக் குடும்பமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அருமைத் தோழர்களுக்கும் திராவிடர் கழகம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு நம் வீரவணக்கம்! வீரவணக்கம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்