ராய்ப்பூர், செப்.11 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாகக் கூறி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாயி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் காங்கிரஸின் மகளிர் பிரிவினர் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மேனாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், தீபக் பைஜ், மாநில மகளிர் பிரிவின் தலைவர் புலோதெவி நேதம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
பலத்த மழையையும் பொருட் படுத்தாமல், ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும், அவர்கள் மேற்கொண்ட முயற் சியை, காவல்துறையினர் தடுத் தனர்.
இந்த போராட்டத்தின்போது, மேனாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பேசியதாவது, “சத்தீஸ்கரில் கடந்த டிசம்பரில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மாநிலம் முழுவதும் சட்டம் –– – ஒழுங்கு நிலைமை சரிந்து விட்டது. பாலியல் வன் கொடுமை, கொள்ளை, கொலை நிகழ்வு அடிக்கடி நடக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டது.
மாறாக, இதுபோன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டவர்களைப் பாதுகாக்கிறது. கேஷ்கல் பகுதியில், ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 20 நாள்களுக்குப் பிறகுதான், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல், துர்க்கில் உள்ள ஒரு பள்ளியில், சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படு கிறது, ஆனால், இந்த நிகழ்வு நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது’’ என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் புலோதெவி நேதம், “சத்தீஸ்கரில் சிறுமிகளோ அல்லது பெண்களோ பாதுகாப்பாக இல்லை.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு நீதியளிப் பதற்குப் பதிலாக, அவர்கள் காவல் நிலையங்களில் அவ மானப்படுத்தப்படுகிறார்கள்’’ என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், போராட் டத்தைக் கருத்தில் கொண்டு, தலைநகரில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக் கப்பட்டதுடன், முதலமைச்சர் இல்லத்திற்குச் செல்லும் சாலை களிலும் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.