சரத்பவார் கட்சியில் இணைய அஜீத்பவார் முயற்சி!

Viduthalai
3 Min Read

தவறை உணர்ந்து விட்டதாக மீண்டும் கருத்து

கட்சிரோலி, செப். 10- ‘குடும்பத்தை உடைப்பவர்களை மக்கள் விரும்புவ தில்லை; எனது தவறை நான் உணர்ந்து விட்டேன்’ என்று மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜீத்பவார் கூறியுள்ளார்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் மீண்டும் அய்க்கியமாக அஜீத்பவார் முயற்சித்து வரு வதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் தனது தவறை உணர்ந்து விட்டதாக மீண்டும் பேசியுள்ளது மகாராட்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவார், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து மகாராட்டிர துணை முதலமைச்சர் பதவியைப் பெற்றார். கட்சியின் பெரும்பாலான நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அஜீத் பவார் பக்கம் சென்றதால் அவரது தலைமையிலான பிரிவுக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னம் வழங்கப்பட்டது.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவார்) பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராட்டிரத்தில் மொத்த முள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (பவார்) – சிவசேனை (உத்தவ்) கட்சிகள் உள்ளிட்ட அடங்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி 30 இடங்களில் வென்றது. பாஜக கூட் டணி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

மக்களவைத் தேர்தலில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து தனது மனைவியை அஜீத் பவார் நிறுத்தினார். ஆனால், தேர்தலில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றார். இந்நிலையில், அஜீத் பவாரை கூட்டணியில் சேர்த்தது தவறு என்று பாஜகவில் ஒருதரப்பினர் கருதுகின்றனர். கடந்த மாதம் புனேயில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜீத் பவாருக்கு கருப்புக் கொடி காட்டி பாஜகவினர். எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியது தவறு என்று அஜீத் பவார் அண்மையில் பேசியிருந்தார். அதே நேரத்தில், அஜீத் பவாரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்று சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகு தான் சகோதரியை (என்னை) பற்றி அவருக்கு நினைவு வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதை மறந்துவிட்டாரா’ என்று சுப்ரியா சுலேவும் கேள்வி எழுப்பினார்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராட்டிர சட்டப் பேரவைக்கான தேர்தல் அக்டோபர்- நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அஜீத் பவார் மீண்டும் பவார் தலைமை யிலான கட்சியில் இணைந்துவிட முனைப்புக் காட்டி வருகிறார்.
இந்நிலையில், கட்சிரோலியில் நேற்று (8.9.2024) நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அஜீத் பவார் பங்கேற்றார். அந்த பகுதியைச் சேர்ந்த மாநில அமைச்சர் தர்மாராவ் அட்டார மின் மகள் பாக்யசிறீ, அஜீத்பவார் கட்சியில் இருந்து விலகி சரத்பவார் அணியில் இணைந்தது குறித்து பேசிய அஜீத்பவார், ‘ஒரு தந்தையைவிட மகளிடம் வேறு யாரும் அதிக அன்பு செலுத்தமுடியாது. கருநாடக மாநிலத்தில் திருமணம் செய்து கொடுத்தாலும், தனது மகளை கட்சிரோலியில் மாவட்ட கவுன்சில் தலைவராக்கியுள்ளார் தர்மா ராவ்.

ஆனால், இப்போது அந்த மகள் வேறு கட்சிக்கு சென்று தந்தையை எதிர்த்துப் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். இது சரியா?. குடும்பத்தை உடைப்பவர்களை மக்கள் விரும்புவதில்லை. ஏற்கெனவே நான் செய்த இதுபோன்ற தவறைச் செய்து, அதை உணர்ந்துவிட்டேன் என்றார்.
கடந்த ஒரு மாத காலத்தில் இப்போது இரண்டாவது முறையாக தனது தவறை உணர்ந்துவிட்டதாக அஜீத் பவார் பேசியுள்ளார்.
மீண்டும் சரத்பவார் அணியில் இணைய அவர் மறைமுகமாக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதன் ஒரு பகுதியாக அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *