புதுடில்லி, செப்.1 உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த பாடுபடும் நபராக பிரதமர் மோடி செயல்பட முடியும் என்றால் மணிப்பூரில் ஏன் அமைதியை ஏற்படுத்தவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்;
மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழலில் பிரதமரின் வருகை மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார். 16 மாதங்களுக்கு பிறகும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை என்றும் நல்லிணக்கம், மறு கட்டமைப்பு இயல்பு நிலை திரும்புவதற்கான எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மோடி மணிப்பூருக்கு வரத் தேவையில்லை என முதலமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ள ஜெயராம் ரமேஷ், ரஷ்யா, உக்ரைன், போலந்து என உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த செல்லும் மோடி மணிப்பூருக்கு சென்று அமைதியை ஏற்படுத்த ஏன்? முயற்சி மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.