ஆளுநரா – அரசியல்வாதியா?

Viduthalai
3 Min Read

சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி இருக்கிறார்.
‘‘1947இல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில் திராவிட சித்தாந்தமும் ஒன்று.
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது. இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை. நமது மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் மீனவர்களின் படகுகள் மூழ்கடிக்கப்படுவதற்கும் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதே காரணம்.
முன்பு இந்தியாவை ஆண்ட அரசுகள் நமது நிலத்தை ஆக்கிரமித்த அண்டை நாடுகளுக்குத் தாரைவார்த்தனர். 1960 போரில் இந்தியாவின் நிலத்தை சீனாவிடம் தாரைவார்த்தனர். அதேபோல் கச்சத்தீவையும் தாரைவார்த்தனர். இதனால் நமது மீனவர்கள் இன்று அண்டை நாட்டு ராணுவத்தால் சுடப்படுகின்றனர்.
தமிழ்நாடு பாரதத்தின் அறிவுசார் மற்றும் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது. எனினும், பள்ளிகள், கோயில்கள், கிராமத் திருவிழாக்கள் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான சமூக பாகுபாடுகள் குறித்து அடிக்கடி வரும் செய்திகள் மிகவும் வேதனைக்குரியவை மற்றும் மிகவும் வெட்கக்கேடானது. அத்தகைய சமூக பாகுபாடுகள் வெறுக்கத்தக்கவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’’ என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

இதைப் பார்க்கும் போது பேசியிருப்பது ஆளுநரா அல்லது ஆர்.எஸ்.எஸ். – பிஜேபியின் அதிகாரப் பூர்வ பேச்சாளரா என்று எவருக்கும் தோன்றும்.
திராவிட சித்தாந்தம் என்பது பிரிவினையை வளர்க்கக் கூடியதாம்.
பிறப்பிலேயே பேதம் பேசும் வருணாசிரம சித்தாந்தத்தை எதிர்த்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற திருவள்ளுவரின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வதுதான் திராவிட சித்தாந்தம்.
‘பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்’, என்ற தந்தை பெரியாரின் சித்தாந்தம்தான் திராவிட சித்தாந்தம்.
ஆவணி அவிட்டம் என்ற பெயரில் தோளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
இதன் பொருள் என்ன? பூணூல் அணிந்த பார்ப்பனர் துவி ஜாதி – இருபிறப்பாளன் என்பது தானே!
இதெல்லாம் ஆளுநர் ரவி அவர்களுக்கு எதார்த்தமாகத் தெரிந்திருக்குமே!
திராவிட சித்தாந்தம் நாட்டைத் தூண்டாடு கிறதாம்.

எப்படி இருக்கிறது? மனிதர்களையே துண்டாடும் சித்தாந்தத்தை குருதி ஓட்டமாகக் கொண்ட சித்தாந்தம் யாருடையது என்பது ஆளுநர் ரவிக்குத் தெரியாதா?
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் சித்தாந்தத்தின் உள்நோக்கம் என்ன? சமஸ்கிருதம், ஹிந்திதான் இந்த நாட்டுக்கான மொழி – அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்களாம்!
அதனை அப்படியே வழிமொழிந்து தங்கள் மொழி, இனம், கலாச்சாரத்தைத் தூக்கி எறிந்தால்தான் – ‘சபாஷ் இவர்கள் அல்லவோ 22 காரட் சுத்த தேசியவாதிகள்’ என்று நற்சான்று பட்டம் கொடுப்பார்கள் போலும்!
கச்சத் தீவைப் பற்றிப் பேசுகிறார் – தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்துக் கண்ணீர் மல்குவதுபோல உதட்டால் பேசுகிறார்.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு மீனவருக்கும்கூட தொல்ைல ஏற்படாது’ என்று 56 அங்குல மார்பளவு கொண்ட பிரதமர் நீட்டி முழங்கினாரே – என்னாயிற்று?

வானிலை அறிக்கை போல அன்றாடம் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுகிறார்களே – இதற்கு என்ன பதில் கூறுவார் கனம் ஆளுநர்?
சுற்றியுள்ள அண்டை நாடுகளை எல்லாம் விரோதித்துக் கொண்டதைத் தவிர சாதித்தது வேறு என்ன?
சீனா தன் எல்லைக்கோட்டை விரிவாக்கிக் கொண்டு இருக்கிறாதே – அதை வசதியாக மறக்கிறாரா – மறுக்கிறாரா!
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த போது– அதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் முழங்கியவர்கள் தி.மு.க. எம்.பி.க்கள் – வெளி நடப்பும் செய்தனர். எந்த அடிப்படைத் தகவலும் தெரியாமல் நாக்கு இருக்கிறது என்று அதை இஷ்டத்துக்கு சுழல விட வேண்டாம் – இது ஓர் ஆளுநருக்கு அழகல்ல!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *