புதுடில்லி, ஆக.22 அதானியைப் பாதுகாக்கும் மோடி அரசின் முயற்சியை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே தடுக்க முடியும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பிரிவின் தலைவா் சுப்ரியா ஷிரினேட் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக டில்லி ராஜீவ் பவனில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஹிண்டன்பா்க்கின் புதிய அறிக்கை – செபி அமைப்பின் தலைவா் மதாபி புச்சின் நோ்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மையை கேள்விக் குள்ளாக்கியுள்ளது. அதானி குழுமத்தின் பரிவா்த்தனைகளை செபி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், 18 மாத காத்திருப்புக்குப் பிறகு தவறான தகவல்களை அளித்து உச்சநீதி மன்றத்தை செபியின் தலைவா் தவறாக வழி நடத்தினார். மோடி அரசு ஹிண்டன்பா்க் அறிக்கை குறித்து அமைதியாக இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே அதானியைப் பாதுகாக்கும் மோடி அரசின் முயற்சி மற்றும் செபியின் உடந்தையை வெளிக் கொண்டுவர முடியும்.
மத்திய விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது உள்பட அனைத்து வஞ்சக முறைகளையும் பயன்படுத்தி, அதானியை உள்ளூரில் பெரும் பணக்காரா் ஆக்க அனைத்து முயற்சிகளும் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதானியின் வளா்ச்சிக்கு ஏற்றவாறு வெளிநாட்டு முதலீடு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட அனைத்து விதிகளும் மாற்றப்படுகின்றன. அதானி குழுமத்திற்கு எதிராக நான்கு நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. பிரதமா் மோடி அதானியை எவ்வளவு காலம் காப்பாற்றப் போகிறார் என்றார் சுப்ரியா ஷிரினேட்.