கருஞ்சட்டை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் இந்த ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 45 மணிநேரம் தியானம் செய்தார். அது நாடாளுமன்றத் தேர்தல் கடைசி கட்டத்தில் இருந்த காலகட்டமாகும். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி செலவிட்ட 45 மணி நேரம் அரசுப் பதிவேடுகளில் எப்படிப் பதிவாகியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திடம் கேட்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்திற்குப் பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடி விடுப்பு எடுக்கவில்லை என்றும், கன்னியாகுமரியில் தியானத்தில் இருந்த போதும் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்தார் என்று பதில் அனுப்பி இருந்தது
மேலும், “பிரதமர் இதுவரை விடுப்பே எடுக்காது பணியில் இருக்கிறார்,” என்றும் அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது.
2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி பொறுப்பேற்றதில் இருந்து ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லையாம்; அவரது அலுவலகம் இப்படித் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடிக்கு முன் இந்தியாவின் மேனாள் பிரதமர்கள் சிலர் தங்கள் பதவிக்காலத்தில் விடுப்பு எடுத்திருந்த தகவலையும் அவர்கள் வெளியிட்டனர். இந்தப் பட்டியலில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் மேனாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி ஆகியோர் அடங்குவர். ஆனால், மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்று பதிவேடுகளில் உள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்படி இருக்கிறது?
கன்னியாகுமரியில் தியானம் செய்தது எப்படி பிரதமரின் அலுவலகப் பணியாகும்?
எப்படி எப்படியெல்லாம் திருகுதாளம் – ஜோடனைக் கச்சேரிகள் நடத்துவதில் பலே ஆசாமிகள் என்பது இதன்மூலம் தெரியவி்ல்லையா?
சீனாவின் ஷாங்காய் பேருந்து நிலையத்தைப் படம் போட்டுக் காட்டி, குஜராத் அகமதாபாத் பேருந்து நிலையம் என்று காட்டியவர்கள்தானே!
இத்தாலியில் உள்ள பிரமாண்டமான சாலையைக் காட்டி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலை என்று மத்தியப் பிரதேச தேர்தலின்போது ‘தில்லாலங்கடி‘ வேலையைக் காட்டிய சமர்த்தர்கள் ஆயிற்றே!
எதைத்தான் செய்ய மாட்டார்கள்?
ராகு, கேது பாம்புகள் நிலாவை விழுங்கின என்று புராணம் எழுதி வைத்திருக்கவில்லையா?