*ஆகஸ்ட் 14 – பொன்னெழுத்துக்களால் வரலாறு தன்னைப் பதிவு செய்த நாள்!
*தந்தை பெரியார் – அம்பேத்கர் – அண்ணா – கலைஞரை நினைவு கூர்கிறோம்!
*முதலமைச்சருக்கு எங்கள் நிரந்தர நன்றி! நன்றி!!
சனாதனத்தை ஒழிக்க, அரசியல் சட்டப்படி ஆலயங்களில் சமத்துவத்தை நிலை நாட்டிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள் கோடி!
இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14,2021. தமிழ்நாட்டின் வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிகளில் காணக் கிடைக்காத சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மய்யப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத்தில் விதைக்கப்பட்டு வளர்ந்து செழித்த காலம், திராவிட இயக்கத்தின் ஆட்சிக்காலம்.
சமூகத்தின் மிக முக்கிய அதிகார மய்யமான கோயில் கருவறையில் 2000 ஆண்டுகளாக நிலவி வந்த பார்ப்பனீய மேலாண்மை அடிப்படையிலான கருவறைத் தீண்டாமை இருள் அகற்றப்பட்ட காலமும் இதுதான்.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் பலவற்றில், கருவறைத் தீண்டாமையை அகற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எடுத்த முயற்சியே வரலாறு போற்றும் நிகழ்வு. அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனம் நிகழ்ந்து இன்றுடன் (14.8.2023) ஈராண்டு நிறைவடைகிறது. அர்ச்சகர் நியமனத்திற்காக பெரும் முயற்சியெடுத்த சமூக நீதிக் காவலர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்ந்து, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறோம்.
இரண்டாண்டுகளுக்கு முன் இந்நாளில் அனைத்து இந்துக்களையும் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் , திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்களுடைய அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாகவும், அரசு கோயில் அர்ச்சகர்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சர்கள் சங்கம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முதலமைச்சரின் தளபதியாக நின்று வென்று காட்டிய செயல்வீரர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலைத் துறை செயலாளர் , மேனாள் ஆணையர் குமரகுரு பரன், இந்நாள் ஆணையர் முரளிதரன் , எங்களுடன் கடந்த 15 ஆண்டுகளாக இணைந்து போராடி வரும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்யம், திராவிடர் கழகத் தினர், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைத்து ஜாதி அர்ச்சக மாணவர்கள் 24 பேரை கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்தார். அந்த அர்ச்சகர் களுக்கு ஏராளமான நெருக்கடிகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பனிய சக்திகள் கொடுத்தாலும் அதையும் தாண்டி சிறப்பான முறையில் கோயில்களில் பூஜை செய்து குடமுழுக்கு நடத்தி மக்கள் மத்தியில் முறையான அங்கீகாரத்தை பார்ப்பனரல்லாத 24 அர்ச்சகர்களும் பெற்றுள்ளனர் என்பது இத் தருணத் தில் மிகவும் நினைவு கூரத்தக்கது.
நம்மைக் கவலை கொள்ளச் செய்யும் விடயங் களும் நடந்து வருவதை இந்நாளில் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை எதிர்த்த வழக் குகளில் அர்ச்சகர் நியமன விதிகள் ரத்து செய்யப்பட் டதுடன், ஆகமக் கோயில் பார்ப்பனருக்கு, ஆகமம் அல்லாத கோயில்கள் சூத்திர,பஞ்சமருக்கு எனப் பிரிக்கும் முயற்சிகளும் நடக்கிறது.
இதை தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.புதிய விதிகள் கொண்டு வந்தோ அல்லது உச்சநீதிமன்றம் சென்றோ இப்பார்ப்பனீய சதியை முறியடிக்க வேண்டும்.அர்ச்சகர் நியமனத்திற்கு ஆகமம் தடையில்லை. குறிப்பிட்ட கோயிலில் ஆகமத்தை படித்த எந்த இந்துவும் அர்ச்சகராகலாம், ஜாதி தடையில்லை என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், திருச்சி வயலூர் முருகன் கோயில் அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனின் தீர்ப்பிற்கு, 11.08.2023 அன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருவாளர்கள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விதித்த தடையும், அர்ச்சகர் நியமனத்திற்கான சட்டத் தடைகளை அகற்றியுள்ளது.
எனவே, இட ஒதுக்கீடு அடிப்படையில் விரைந்து கோயில்களில் உடனடியாக அர்ச்சகர் பணி நியமனத்தை நடத்த வேண்டும்.
மிக முக்கியமாக, எங்களுடன் 2008 ஆம் ஆண்டிலேயே பயிற்சி முடித்து தீட்சை பெற்ற 100-க்கும் மேலான மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு உடனே பணிநியமனம் வழங்க வேண்டும். இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர், பழனி முருகன் கோயில்கள், திருவரங்கம் அரங்க நாதர், சென்னை கபாலீசுவரர் கோயில்களில் தமிழ்ச் சமுதாயத்தின் தேவர் , கவுண்டர், யாதவர், வன்னியர், செட்டியார், பிள்ளை, ஆதிதிராவிடர் உள்ளிட்டோர் கோயில் கருவறையில் நுழைய முடியவில்லை என்பது கடும் வேதனைக்குரியது.
அரசியல் சட்டத்தின் ஆட்சி என்பதற்கான சவால் இது.
எனவே இந்நாளில் சமத்துவ, சமூகநீதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மக்கள் உழைப்பில் உருவாக்கப்பட்ட கோயில்களில் தமிழையும் தமிழர் களையும் நிலைபெறச் செய்ய வேண்டுகிறோம்.
மேலும் மாண்புமிகு. முதலமைச்சரின் உத்தர வின்படி இன்று திறக்கப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் திராவிட இயக்க வரலாற்றில் முக்கிய சாதனையாக விளங்கப் போவதுடன், கருவறை தீண்டாமை ஒழிப்பில் முக்கிய படைக் கலன்களாக விளங்கட்டும்.தமிழ்நாடு அரசின், இந்து சமய அறநிலையத்துறையின் இம்முயற்சிக்கு நன்றிகள் கோடி. திராவிட இயக்கத்தின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து நிற்கும் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இம் முயற்சிக்கு தமிழ்நாடு மக்கள் , ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள் துணை நிற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
– வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு