திருவனந்தபுரம்,ஆக. 2- கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 4ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து மீட்பு பணியில் களம் இறங்கி உள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே ஒன்றிய அரசு எச்சரிக்கை வழங்கியது. மழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரளாவிற்கு 2 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஒன்றிய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரள அரசு புறம் தள்ளியது ஏன்? முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் தேசிய பேரிடர் மீட்புப்படை முன்கூட்டியே அங்கு சென்றது. குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாள்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம் என்றார்.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இந்திய வானிலை ஆய்வு மய்யம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. எனினும், வயநாட்டில் 500 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. இது வானிலை ஆய்வு மய்யம் கணித்ததை விட மிக அதிகம். 30.7.2024 அன்று காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குற்றம் சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.