கலவரத்தின் மறுபெயர் கன்வார் யாத்திரையா?

Viduthalai
2 Min Read

பரிதாபாத், ஆக.2 கன்வார் யாத்தி ரையின்போது கார் மோதிய தால் வன்முறை வெடித்ததால் பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டது.
உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடத்தப்படுகிறது.
இந்த யாத்திரையின்போது சிவபக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கன்வார் பக்தர்கள், கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை, ஆகஸ்ட் 6ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரையின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதற்கிடையே, உத்தரப்பிர தேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள், உணவு வண்டிகளில் உணவக பெயர்ப் பலகையில் அதன் உரிமையாளர் பெயர் இடம் பெறவேண்டும் என முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 22ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. மேலும், இதுதொடர்பான வழக்கும் விசாரணையில் உள்ளது.

கட்டைகளால் சரமாரியாகத் தாக்கினர்
இதற்கிடையே, கன்வார் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் சிலர் கடந்த சில நாட்களாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 21ஆம் தேதி முஜாபர் நகரில் இசுலாமிய ஓட்டுநரும், அவர் ஓட்டி வந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 24ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் பக்தர்கள் கட்டைகளால் சரமாரியாகத் தாக்கினர். இந்தக் காட்சிப் பதிவு கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வன்முறை நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. கடந்த ஜூலை 27ஆம் தேதி, முராத்நகரில் உள்ள ரவாலி சாலை அருகே சென்ற கன்வார் பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியதில், அவர்கள் கொண்டு சென்ற ‘புனித‘ நீர் குடம் உடைந்து ஓடியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அந்த கார் ஓட்டுநரை வெளியே இழுத்து சரமாரியாகத் தாக்கினர். அவர் ஓட்டி வந்த காரையும் நாசம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும், மேலும் அவர் தவறான பக்கத்தில் காரை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. காவல் துறையினருக்கும், பக்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தின்போது அரசு வாகனங்களை எல்லாம் பக்தர்கள் அடித்து நாசம் செய்தனர். இந்தக் காட்சிப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *