“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி”

Viduthalai
2 Min Read

மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி. உருக்கம்!

புதுடில்லி, ஆக.1- மணிப்பூர் பிரச்சினைக்கு குரல் கொடுத்துவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார் மணிப்பூர் காங்கிரஸ் எம்பி ஆல்பிரட் ஆர்தர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த பட்ஜெட்டில் தனது நாற்காலியை தக்க வைத்து கொள்வதற்காக, பாஜக தனது கூட்டணி கட்சிகளுக்கு என்று நிதி அறிவிப்பினை வாரி வழங்கியுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது.
தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி. ஆல்பிரட் ஆர்தர் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மணிப்பூரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கலவரம் நடைபெற்று வரும் நிலையில், பல பேரின் உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது. இந்த மோதலை தொடர்ந்து வேடிக்கை பார்த்து வரும் ஒன்றிய அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் வெளிநாடு வரை செல்லும் பிரதமர் மோடி, உள்நாட்டில் இருக்கும் மணிப்பூருக்கு சென்று, மக்களுக்கு ஆறுதல் சொல்லமல் இருப்பது பலர் மத்தியிலும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் மோடியை மணிப்பூருக்கு செல்லுமாறு வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது வரை அங்கு எட்டிக்கூட பார்க்கவில்லை.
கலவரத்தை நிறுத்த நடவடிக்கையும் எடுக்காமல் மோடி அரசு வாயாலே வடை சுட்டு வருகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆல்பிரட் ஆர்தர் வெற்றி பெற்றுள்ளார். இந்த சூழலில் மணிப்பூருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அவர் நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் மணிப்பூர் காங்கிரஸ் எம்பி ஆல்பிரட் ஆர்தர் பேசுகையில், “மணிப்பூர் வன்முறை முடிவுக்கு வராததற்கு காரணம் அந்த மாநில முதலமைச்சர் என்று மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். முதலமைச்சர் என்கிற ஒரு நபரை நீக்கினால் அங்கு நீடித்துவரும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். அதற்கு பாஜக அரசு முயற்சிக்க வேண்டும். அமைதி ஏற்பட முதலமைச்சரை நீக்க வேண்டும்.
மணிப்பூரில் கலவரம் வெடித்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. அங்கு ஒரு ஒன்றிய அமைச்சரை கூட காணவில்லை. பிரதமர் இதுவரை அங்கு வரவில்லை. 10 ஆண்டுகளாக மன்கி பாத் மூலம் பேசும் பிரதமர் மணிப்பூர் குறித்து பேசுவதில்லை. மணிப்பூர் பிரச்சினைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத் பவர் உள்ளிட்டோருக்கு நன்றி.” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *