ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு நதிநீர் பிரச்சினை குறித்து மனு அளிப்பு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 26- டில்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசி னார். அப்போது அவரிடம் அமைச்சர் துரை முருகன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கருநாடகாவில் தற்போது மழை பெய்து வருவதால் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை நிலுவை பாக்கி இல்லாமல் கருநாடக அரசு தந்துள்ளது. இந்த மாதம் இறுதிவரை தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 45 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு தடையாக இருப்பதால் ஒன்றிய அரசு அதில் தலையிட வேண்டும். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.இந்த நிலையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

புதிய அமைச்சரவை பதவியேற்றபின், துறை சார்ந்த அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். மேகதாது, காவிரி விவகாரம் குறித்து ஒன்றிய அமைச்சரிடம் தெளிவாக பேசினோம். காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்தும் ஒன்றிய அமைச்சரிடம் பேசியுள்ளோம்.

ஒன்றிய அமைச்சர் கோரிக்கைகளை கேட்டுவிட்டு நிறைய விஷயங்கள் பேசினார். அவர் ஹிந்தியில் பதிலளித்ததால் அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒருபோதும் கருநாடகா காவிரி நீரை திறந்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *