‘‘திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்’’ என்று அமைச்சர் மாண்புமிகு ரகுபதி பேசியிருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதா?

Viduthalai
3 Min Read

– கலி.பூங்குன்றன் –
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசின் சட்டத் துறை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி பேசியதாவது:
‘‘திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி யாக நாங்கள் ராமனைப் பார்க்கிறோம். ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காவியம் ராம காவியம். சமத்துவத்தையும், சமூக நீதியையும் எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன்.
ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனையால் அறுதிப் பெரும்பான்மையோடு தி.மு.க. ஆட்சி அமைக்கும். யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக் கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது’’
என்று பேசியிருக்கிறார்.
அமைச்சர் உரையின் முதல் பகுதியைப் படித்தபோது, பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ‘‘‘திராவிட மாடல்’ ஆட்சியின் முன்னோடி ராமன்’’ என்று தி.மு.க. அமைச்சரவையில் இருக்கக் கூடியவர், திராவிட இயக்கத்தின் சித்தாந்த அடிப்படைக்கே விரோதமாகப் பேசியிருக்கிறார்.
‘‘இராமாயணம் என்பது ஆரியர் – திராவிடப் போராட்டம்’’ என்பது திராவிட இயக்கத்தவர் மட்டுமல்ல; வரலாற்றுப் பேராசிரியர்களே குறிப்பிடுகின்றனர்.

‘‘சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான். இது வருணாசிரமத்துக்கு விரோதம்; அதன் காரணமாக, பிராமணன் வீட்டுப் பிள்ளை செத்தது’’ என்று அச்சிறுவனின் தகப்பனார் சக்ரவர்த்தி ராமனிடம் முறையிட, அதனைக் கேட்டு, ராமன் விரைந்து சென்று, வருணாசிரமத்திற்கு விரோதமாக சூத்திர சம்பூகன் தவம் இருந்தான் என்று கூறி, ஒரு காட்டில், மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்துகொண்டிருந்த சம்பூகனை ராமன் வாளால் வெட்டிக் கொன்றான்; அக்கணமே செத்துப் போன பிராமணக் குழந்தை உயிர் பிழைத்தது என்பதை ஒப்புக்கொள்வதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் கருத்தா – தத்துவமா?
திராவிட இயக்கத் தத்துவ ஆசான் தந்தை பெரியாரோ, அவர் வழியில் கொள்கையைப் பரப்புரை செய்த அறிஞர் அண்ணாவோ, முத்தமிழ் அறிஞர் கலைஞரோ இப்படிக் கூறியதுண்டா?
இராமன் படத்தை எரித்தவர் தந்தை பெரியார் என்ற வரலாறு தெரியுமா?
தந்தை பெரியார் எழுதிய ‘‘இராமாயணப் பாத்திரங்கள்”, “இராமாயணக் குறிப்புகள்’’ என்ற நூல்களை அறியாதவரா அமைச்சர் பெருமான்? இந்த நூல் ஹிந்தி, ஆங்கிலம், வங்க மொழி களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதே!

‘‘சச்சி இராமாயணா’’ என்று ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட தந்தை பெரியாரின் ‘‘இராமாயணப் பாத்திரங்கள்” என்ற நூல் உ.பி. மாநில அரசால் தடை செய்யப்பட்டு, அம்மாநில உயர்நீதிமன்றம் அத்தடையை ஏற்றுக்கொண்ட நிலையில், உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது என்பது வரலாறு. பேராசிரியர் ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களோடு விவாதப் போர் நடத்தி, இராமாயணத்தை ஏன் கொளுத்த வேண்டும்? என்று திராவிட இயக்கக் கொள்கையை நிலை நிறுத்தியவர் அறிஞர் அண்ணாவாயிற்றே!
‘‘தீ பரவட்டும்!’’ என்ற நூலாக அது வெளிவந்திருக்கிறதே!
ராஜாஜி ‘கல்கி’ இதழில் தொடர்ந்து எழுதி வந்த ‘‘சக்ரவர்த்தித் திருமகன்” என்ற தொடர் கட்டுரைக்கு மறுப்பாக, ‘‘சக்கரவர்த்தியின் திருமகன்” என்று தொடராக முத்தமிழறிஞர் எழுதி, அதுவும் நூலாக வெளிவந்துள்ளதே! திராவிட இயக்கம் என்று நெஞ்சு நிமிர்த்தி ‘‘திராவிட மாடல்” அரசு என்ற பெருமையுடன் நடைபோடும் ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், ஓர் அமைச்சர், திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவத்திற்கே எதிராகப் பேசலாமா?
‘‘ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம்” என்று ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலி யுறுத்தப்பட்டுள்ள

மதச்சார்பின்மைக்கு விரோதம் என்பது – தி.மு.க.வின் நிலைப்பாடு!
இதற்கு விரோதமாக தி.மு.க. தலைமை யிலான ஆட்சியில், அமைச்சராக இருக்கக் கூடியவர் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் நிலைப்பாட்டைக் கையில் எடுத்துக் கொள்ள லாமா?
‘‘தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல – அடிப்படையில் ஒரு சமுதாய இயக்கம்’’ என்று பல முக்கியமான கட்டங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர்.
1971 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் – சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தை மய்யப்படுத்தி, மதவாத சக்திகள் தி.மு.க.விற்கு எதிராகப் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், அந்தத் தேர்தலில் எந்தத் தேர்தலிலும், எந்தக் கட்சியும் பெறாத மகத்தான வெற்றியை (184 இடங்களில்) தி.மு.க. பெற்றது எல்லாம் மாண்புமிகு அமைச்சர் ரகுபதி அவர்கள் அறிய
மாட்டாரா?
அடிப்படைக் கொள்கையை நீர்த்துப் போகும் வகையில் துரும்பு அளவுக்குப் பேசினாலும், எழுதினாலும், செயல்பட முனைந்தாலும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்.
இதனை உரிமையுடன் சுட்டிக்காட்ட வேண்டியது தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் முக்கிய கடமையாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *