விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15
ஒன்றிய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of National Law Universities) சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர ‘கிளாட்’ (Common Law Admission Test- CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் ஒரு ஆண்டு எல்எல்எம் படிப்புகளுக்காக (5-year integrated LLB. மற்றும் One year LLM. programmes) இந்த நுழைவுத் தேர்வு நடக்கிறது.
அதேபோல தேசிய சட்டப் பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்த நிலையில், 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இதற்காக கிளாட் தேர்வு, டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
கிளாட் நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்களுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4 ஆயிரம் கட்ட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.3,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பெற ரூ.500 கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.
மாணவர்கள், அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காகத் தேர்வர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.