நீட் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரம் உண்மைக்கு மாறானது!

Viduthalai
7 Min Read

உண்மையில் நடந்தது என்ன?

புதுடில்லி, ஜூலை 14 நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை. எனவே, மீண்டும் தேர்வு நடத்தவேண்டிய அவசியம் இல்லை. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு ஜூலை 3 ஆவது வாரத்தில் தொடங்கி 4 சுற்றுகளாக நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்வை ரத்து செய்யக் கூடாது என்று குஜராத்தை சேர்ந்த 56 மாணவ, மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன (11.7.2024).

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஅய் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, என்டிஏ, ஒன்றிய கல்வித் துறை சார்பிலும் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களின் நகல்கள் மனுதாரர்களுக்குக் கிடைக்கவில்லை என்று தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நகல்களை அனைத்து மனுதாரர்களுக்கும் வழங்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர்கள் நலன் கருதி வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 18 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

ஒன்றிய கல்வித் துறை தாக்கல் செய்துள்ள 44 பக்க மனுவில் கூறியிருப்பதாவது:

நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை. எனவே, மீண்டும் நீட் தேர்வை நடத்தவேண்டிய அவசியம் இல்லை. இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3 ஆவது வாரத்தில் தொடங்கி 4 சுற்றுகளாக நடத்தப்படும்.
கலந்தாய்வு நடக்கும்போதோ, அதற்குப் பிறகோ, முறைகேடுகளில் பயனடைந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தால் அந்த விண்ணப்பம் எந்த கட்டத்திலும் ரத்து செய்யப்படும். நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக சென்னை அய்அய்டி சார்பில் அறிவியல்பூர்வமாக புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. நகரங்கள் அளவிலும், தேர்வு மய்யத்தின் அடிப்படையிலும் புள்ளிவிவரங்கள் அலசி ஆராயப்பட்டன. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவ, மாணவிகளின் பின்னணி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் 18 மாநிலங்களை சேர்ந்தவர்கள். 56 நகரங்களில் 95 மய்யங்களில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை.

இந்த முறை நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் சுமார் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று சென்னை அய்அய்டி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது’’ என்று ஒன்றிய கல்வித் துறையின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘‘என்டிஏ தாக்கல் செய்த மனுவில், ‘டெலிகிராம் செயலியில்’ மே 4 ஆம் தேதி நீட் வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் நிழற்படங்கள் பரவின. இவை போலியானவை. வினாத்தாள் முன்கூட்டியே கசியவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற நிழற்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஅய் தாக்கல் செய்த மனுவில், ‘‘பீகாரின்
குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நீட் வினாத்தாள் கசிந்து, சில மாணவர்களுக்கு மட்டுமே வினாத்தாள் கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசியவில்லை. மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் முறைகேடுகள் தொடர்பாக ‘‘பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சிபிஅய் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரத்தின்
சாரம் வருமாறு!

1. நீட் தேர்வு முடிவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்யக்கூடாது.
2. நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு எந்த வித ஆதாரம் இல்லை எனவும்
3. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்வதால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவார்கள்.
4. நீட் தேர்வு முறைகேடு பற்றி எழுந்துள்ள புகார்களை விசாரிக்க சிபிஅய்-க்கு உத்தரவிட்டுள்ளோம்.
5. இனி வரும் தேர்வுகள் வெளிப்படைத் தன்மை யுடனும், நியாயமாகவும் நடைபெற புதிய சட்டத்தை இயற்றியுள்ளோம்.
6. நியாயமற்ற வழிமுறைகள் தொடர்பான குற்றங்களுக்கு கடும் தண்டனையைத் தருவதற்கு சட்டம் நிறைவேற்றப்படும்.
7. மேலும்,தேர்வுகளை திறம்பட நடத்த, பரிந்துரைகளை அளிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது. லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை போனது என்பதெல்லாம் விலாவாரியாக வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது – என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே!
சிங்கப்பூர் தொலைக்காட்சிகளில் எல்லாம் நீட் தேர்வு முறைகேடு பற்றி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் அண்டப்புளுகு – ஆகாசப் புளுகுகுளைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது அதன் இயலாமையைத்தான் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெற்ற முறைகேடுகள் வருமாறு:

1. குஜராத்
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு தொடர்பாக குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை சிபிஅய் கைது செய்துள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி அடையச் செய்வதற்காக 27 மாணவர்களிடம் தலா ரூ.10 லட்சம் கேட்டதாக கைதான பள்ளி உரிமையாளர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இதுதொடர்பான வழக்கில் ஏற்கெனவே, வதோதராவைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் பரசுராம் ராய், ஜெய் ஜலாராம் பள்ளி முதல்வர் புருஷோத்தம் சர்மா, பள்ளி ஆசிரியர் துஷார் பட், இடைத்தரகர்கள் விபோர் ஆனந்த் மற்றும் ஆரிப் வோஹ்ரா ஆகிய 5 பேரை பஞ்சமால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாணவர்கள் ஜெய் ஜலாராம் பள்ளியை தேர்வு மய்யமாக தேர்வு செய்யுமாறு வழிநடத்தப்பட்டது கைதானவர்களிடம் சிபிஅய் அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

2. உத்தரகாண்ட்
உத்தரகாண்ட்டில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான மோசடி நபரை ஒருவரை டேராடூன் காவல்துறை கைது செய்த காவல்துறை, சிபிஅய்யிடம் ஒப்படைத்தனர்.

3. அரியானா
அரியானாவில் ஒரே மய்யத்தில் தேர்வு எழுதிய 6 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சை யான நிலையில் குறிப்பிட்ட தேர்வு மய்யம் உள்ள பள்ளியின் உரிமையாளர் பாஜகவில் முக்கிய தலைவராக உள்ளார். இதனால் அவரிடமும் விசாரணை நடந்துவந்த நிலையில் இதுதொடர்பாக 3 பேரை அரியானா காவல்துறையினர் கைதுசெய்தனர்

4. மகாராட்டிரா
மகாராட்டிரத்தின் லத்தூரை சேர்ந்த 2 அரசு பள்ளி ஆசிரியர்கள் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை வெற்றி பெற வைக்க அய்ந்து லட்சம் கட்டணமாகப் பெற்று மோசடிக்காரர்களுக்கு பங்கிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

5. பீகார்
நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் 13 பேரை கைது செய்தனர்

6. உத்தரப்பிரதேசம்
நீட் முறைகேட்டில் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் முக்கியா பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அவரது மனைவி சட்ட மன்றத் தொகுதி வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டார். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 4 பேர் கைதானார்கள்

7. ஜார்கண்ட்
நீட் முறைகேடு தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் அமன் சிங் உள்ளிட்ட 4 பேரை சிபிஅய் கைதுசெய்தது

8. ராஜஸ்தான்
ராஜஸ்தானில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஆள்மாற்றட்டத்திற்காக குழுவாக இணைந்து செயல்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஓர் ஆசிரியை நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இருந்து தப்பிக்க வாரணாசி சென்று கங்கையில் குளித்து பசுமாட்டிற்கு வெல்லமும், நெய் ரொட்டியும் கொடுக்கும் போது சிபிஅய் கைதுசெய்தது.
இதுவரை மேலே கூறிய மாநிலங்கள் மட்டுமல்லாமல் 9.டில்லி, 10.மத்தியப்பிரதேசம், 11.ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 50 க்கும் மேற்பட்ட நபர்களை சிபிஅய் கைது செய்துள்ளது.

கைதுசெய்த நபர்களில் பெரும்பாலானோர்மீது நீட் வினாத்தாளை முதல் நாளே பெற்று அதனை பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தேர்வு நடைபெறும் 5.5.2024 க்கு முன்பே அதாவது 4.05.2024 அன்றே நீட் வினாத்தாள்கள் மேலே கூறப்பட்ட மாநிலங்களில் பலரது சமூகவளைதளஙக்ளில் பகிரப்பட்டதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் தேர்விற்கு ஒரு நாளைக்கு முன்பே பகிரப்பட்டு விட்டதாக விஜயேந்திர குப்தா என்ற நபர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். தற்போது அவரையும் பீகாரில் வைத்து சிபிஅய் கைது செய்துள்ளது.
இவ்வளவு நடந்தபிறகும் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சூரியனைக் கையால் மறைப்பது போல் பிரமாணப்பத்திரத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
நீட்டை எப்படியும் நிலைநிறுத்த வேண்டும் என்று ஒன்றிய பிஜேபி அரசின் நிலைப்பாட்டைத்தான் இது வெளிப்படுத்துகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *