மதுரை: பெரியார் பெருந்தொண்டர் கொம்பூதி சே.முனியசாமி பவள விழா – நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

Viduthalai
12 Min Read

பெரியார் தொண்டர்களாக இருப்பதற்கு முழுத் தகுதியுள்ளவர்கள் யார்?
வாழ்க்கையில் உண்மை, நேர்மை, அறிவு நாணயம், யாரையும் ஏமாற்றாமை – இவற்றைக் கொண்டோரே அதற்குரியவர்!

மதுரை, ஜூலை 5 பெரியார் தொண்டர்களாக இருப்பதற்கு முழுத் தகுதியுள்ளவர்கள் யார் என்றால், வாழ்க்கையில் உண்மை, நேர்மை, அறிவு நாணயம், அதேநேரத்தில் யாரையும் ஏமாற்றாத மிகப்பெருமையான நேர்மை கொண்டவர்கள்தான். எதை நாம் சொல்கிறோமோ, அதைச் செய்கிறோம். இதுதான் இந்த இயக்கத்தில், பெரியார் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம். அவர்கள் அளக்கப்படுவது பணத்தால் அல்ல; பதவியால் அல்ல; புகழால் அல்ல. அவர்கள் அளக்கப்படுவது, அவர்களுக்கு வருகின்ற எதிர்ப்பால். அந்த எதிர்ப்பை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்; எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் பெருந்தொண்டர் சே.முனியசாமியின் பவள விழா – நூல் வெளியீட்டு விழா!
கடந்த 27.6.2024 அன்று மதுரையில் நடைபெற்ற மதுரை மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் கொம்பூதி சே.முனியசாமி அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள்- பவள விழா, ‘‘விறகு வண்டி முதல் விமானம் வரை’’ நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமையேற்று , நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

‘‘விறகு வண்டி முதல் விமானம் வரை’’
தன் வரலாறு நூல்!
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய, உழைப்பின் உருவமாக இருக்கக்கூடிய, லட்சியத் தொண்டராக, தோழராக, ஓர் எடுத்துக்காட்டான வகையில் தன்னுடைய வாழ்க்கையை – 74 ஆண்டுகள் முடிந்து 75 ஆவது ஆண்டு தொடங்குகின்ற – இந்த பவள விழா தொடங்குகின்ற காலம்வரையில் மிகச் சிறப்பாக நடத்தி, இனியும் வாழக்கூடிய காலத்தில், தன்னுடைய இல்லம் என்பது பெரிதும் தொண்டறம்தான் என்பதை மிகச் சிறப்பாக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கக் கூடிய எங்களுடைய அருமை கொள்கை வீரர் அய்யா முனியசாமி அவர்களுடைய 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – அதேபோல், அவரால் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கின்ற ‘‘விறகு வண்டி முதல் விமானம் வரை” என்ற இந்த அற்புதமான தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா – அவருக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும், அய்யா முனியசாமியினுடைய குருதிக் குடும்பத்தைச் சார்ந்த நம்முடைய கொள்கை உறவுகளே, தோழர்களே, என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் முனியசாமி அவர்கள் ஒரு புத்தகம் எழுதி, அதில் தன்னுடைய அனுபவங்களையெல்லாம் வடித்துக் காட்டியிருக்கிறார்.

முனியசாமியின் உயர்வுக்கு
அடித்தளம் இரண்டு பெண்கள்!
இவர் 75 ஆண்டுகாலம் இவ்வளவு சிறப்பாக இருப்பதற்கு அடிக்கட்டுமானம் – அடித்தளம் இரண்டு பெண்கள். அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஒருவர், அவருடைய தாயார். முனியசாமி அவர்களுடைய தாயாரான முனியம்மா படத்தினை இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அதற்கடுத்து, அவருக்குப் பெரிய பாக்கியம், அவருடைய வாழ்விணையர் பாக்கியம் அம்மாள்.
இன்றைக்கு அவர் வழியில், அம்மா அவர்கள் கொள்கை வயப்பட்டவர்களாக ஆகிவிட்டார். அதற்காக அவருக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
75 ஆண்டுகாலம் அவர் வாழ்ந்துள்ளார், வாழுகிறார், மகிழ்ச்சியாக இருக்கிறார். பேரப் பிள்ளைகளோடு கொஞ்சி மகிழ்கிறார். வீட்டிற்கும் செய்கிறார், நாட்டிற்கும் செய்கிறார்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஒரு நல்ல தொண்டு அது. தொண்டறம் என்பது அவருக்கு இருக்கிறது என்றால், அதற்காக முதலாவதாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள் இரண்டு பேர்தான். முதலில், அவருடைய தாயார்; அதற்கடுத்து அவருடைய வாழ்விணையராக இருக்கக்கூடிய பாக்கியம் அம்மையார் அவர்கள்தான்.

பெண்களை முதலில் பாராட்டவேண்டும்!
எப்பொழுதுமே பிறந்த நாள் விழாக்கள், மற்ற விழாக்கள் என்றால், ஆண்களைப் பாராட்டுவதுதான் வழக்கமாக இருக்கும். ஆனால், அதற்குக் காரணமாக இருக்கக்கூடிய பெண்களை முதலில் பாராட்டவேண்டும்; தாய்மார்களைப் பாராட்டவேண்டும். ஏனென்றால், அவர்கள் புதைந்திருப்பார்கள்; வெளியில் தெரியாது.
இன்றைக்கு முனியசாமி அவர்கள் நிம்மதியாக, உற்சாகமாக எல்லாப் பணிகளையும் செய்வதற்கு, அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லையானால், அவ்வாறு செய்ய முடியாது. எல்லாக் குடும்பத்தினருக்கும் இது பொருந்தும்.
ஆகவே, நம்முடைய தோழர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் இணையரையும், உங்கள் தாய்மார்களையும், உங்கள் குடும்பத்துப் பெண்மணிகளையும் பாராட்டுங்கள், வாழ்த்துங்கள்; அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள்! அதைத்தான் இந்த விழாவில் ஒரு செய்தியாகவே நான் வைக்க விரும்புகின்றேன்.
ஏனென்றால், நம்முடைய நாட்டில், பாராட்டு என்பது ஒருவழிப் பாதையாகத்தான் இருக்கிறது. ஆண்களுக்குப் பாராட்டு விழா நடக்கும்; அவருடைய வாழ்விணயர் ஓரி டத்தில் அமர்ந்திருப்பார். ஆனால், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதுபோன்ற ஒரு நிலையை உருவாக்கவேண்டும்.
அவருடைய உழைப்பு சாதாரணமானதல்ல. முனியசாமி அவர்கள் விறகு வண்டியில் தொடங்கி, விமானத்தைப் பிடித்துவிட்டார். நான், ரயிலைப் பிடிக்கவேண்டும்.
இங்கே அருமையாகத் தோழர்கள் உரையாற்றினார்கள். நான் பேசவேண்டும் என்பது முக்கியமல்ல; மற்றவர்கள் அவரைப் பாராட்டுவதைக் கேட்கும்பொழுதுதான் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற கொள்கைக் குடும்பத்தில் ஒருவராக இருக்கின்றோமே என்று மகிழ்ச்சியடைகிறேன்.

நூற்றாண்டு விழா நிறைவு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்!
நூற்றாண்டு விழா நிறைவு நாயகரான நம்முடைய கலைஞர் அவர்களை அழைத்து, தருமபுரியில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைக்கும்படியாக, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களைக் கேட்டோம்.
அந்த சிலை, அண்ணா அவர்களால் திறந்து வைக்கவேண்டும் என்பதற்காக, சிலைப் பணிகள் முடி வடைந்து, கட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அண்ணா அவர்களுக்கு உடல்நலம் ஒத்துழைக்கவில்லை.
ஆகவே, அண்ணா அவர்கள் உடல்நலம் பெற்று வரு வார் என்று ஏறத்தாழ 10 மாதங்கள் அந்த சிலை மூடப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
அண்ணா அவர்கள் மறைந்த நிலையில், முதல மைச்சராக கலைஞர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், தருமபுரியில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டவுடன், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று திறந்த முதல் சிலை அதுதான்.

‘‘நான் உருப்பட்டு இருக்கிறேனா?
இல்லையா?’’ – கலைஞர்!
அச்சிலை திறப்பு விழாவில், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்பொழுது,
‘‘தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை நான் மாணவப் பருவத்திலேயே ஏற்றுக்கொண்டு, நான் இளைஞனாக இருந்து இந்த இயக்கத்திற்கு வந்த நேரத்தில், எங்கள் ஊர்க்காரர்கள் என்னைப் பாராட்டவில்லை. மாறாக என்ன சொன்னார்கள் என்றால், ‘இவன் உருப்படுவானா?’ போயும், போயும் சாமி இல்லை என்று சொல்லுகின்ற, கருப்புச் சட்டைக் கட்சிக்குப் போயிருக்கிறானே, இவன் உருப்படு வானா?” என்று சொன்னார்கள். இப்பொழுது உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன், ‘‘நான் உருப்பட்டு இருக்கிறேனா? இல்லையா?” என்பதை ஊர் அறியும், உலகம் அறியும், நீங்களும் அறிவீர்கள்” என்றார்.
கலைஞர் அவர்கள் குவளையிலிருந்து குவலயத்திற்கு வந்தவர். அவர் பிறந்த ஊர் திருக்குவளை.
ஆகவே, குவளையத்தில் பிறந்த ஒருவர், குவலயத்தையே ஆளக்கூடிய அளவிற்கு உயர்ந்தார்.
அதுபோன்றுதான் முனியசாமியும். எத்தனை சாமிகள் இருந்தாலும், துடுக்காக வளர்ந்தவர் முனியசாமி அவர்கள் மக்களுக்கு அவர்களது தேவைக்குக் கொடுத்திருக்கிறார்.
முனியசாமி அவர்களைப்பற்றி இங்கே உரையாற்றியவர்கள் சிறப்பாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும்விட அடித்தளம் என்னவென்றால், உழைப்பு, நேர்மை, சுயமரியாதை வாழ்க்கைக்கு அவைதான் அடிப்படை.

உண்மை, நேர்மை, அறிவு நாணயம்!
முனியசாமி அவர்களுக்கு மட்டுமல்ல, பெரியார் தொண்டர்களாக இருப்பதற்கு முழுத் தகுதியுள்ளவர்கள் யார் என்றால், வாழ்க்கையில் உண்மை, நேர்மை, அறிவு நாணயம், அதேநேரத்தில் யாரையும் ஏமாற்றாத மிகப்பெருமையான நேர்மை, எதை நாம் சொல்கிறோமோ, அதைச் செய்கிறோம்.
இதுதான் இந்த இயக்கத்தில், பெரியார் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம்.

எதிர்ப்பை எப்படி எதிர்கொள்கிறார்கள்;
எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான்!
அவர்கள் அளக்கப்படுவது பணத்தால் அல்ல; பதவியால் அல்ல; புகழால் அல்ல. அவர்கள் அளக்கப்படுவது, அவர்க ளுக்கு வருகின்ற எதிர்ப்பால். அந்த எதிர்ப்பை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்; அந்த எதிர்ப்பை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.
அதுபோன்று முனியசாமி அவர்கள் வாழ்ந்ததினால்தான், இன்றைக்கு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இங்கே உரையாற்றும்பொழுது நண்பர்கள் சொன்னார்கள், ‘‘இங்கே வெளியிடப்பட்ட நூலுக்குள் நாங்கள் போகவில்லை; ஆனால், ஆசிரியர் அவர்கள் படித்துவிட்டார்” என்றார்கள்.
நான் எப்பொழுதுமே நூலுக்குள் போனதினால்தான் பிரச்சினையே! நூலுக்குள் போவதை நாளெல்லாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
நாணயத்திலேயே மிக உச்சமான நாணயம் – அறிவு நாணயம்தான்!
இங்கே வெளியிடப்பட்ட நூலின் என்னுரையில் சொல்லி யிருக்கிறார்.
‘‘ஆரம்ப காலத்திலிருந்து நாணயம் என்பதை மிகவும் கண்ணும், கருத்துமாய் கடைப்பிடித்து வந்தேன்.”
இதுதான் அவருடைய வெற்றிக்கு அடித்தளம்.

நாணயத்திலேயே மிக உச்சமான நாணயம் எது தெரியுமா?
அறிவு நாணயம்தான்.
இப்பொழுது நாணயம் அதிகமாகச் சேர சேர நாணயம் பெருகுதே தவிர, உண்மையான நாணயம் விடைபெற்றுக் கொள்கிறது.
இந்தப் புத்தகத்தில் ஒரு நிகழ்வைச் சொல்லுகிறார். தன்னுடைய வியாபாரத்தில் எல்லாவற்றையும் இழந்து விடுகிறார். அவருடைய வாழ்க்கை இணையர், தன்னுடைய நகைகளைக் கழற்றிக்கொடுத்து, இதை முதலீடாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

‘‘இழந்தவர்கள் சங்கத்திற்கு”
தலைவர்கூட உண்டு!
நம்முடைய நாட்டில் டெபாசிட் இழந்தவர்கள் சங்கம்கூட உண்டு. ஓய்வு பெற்றவர்கள் – அதனால் கிடைத்த பலா பலன்களை வைத்து வாழலாம் என்று நினைத்தபொழுது, அதிக வட்டி தருகிறோம் என்று சொல்வதை நம்பி, யோசிக்கா மல் அதில் முதலீடு செய்ததினால், இழப்பிற்கு ஆளாகிறார்கள்.
இதற்காக தனி சங்கமே இருக்கிறது; அதற்குப் பெயர்தான் ‘‘இழந்தவர்கள் சங்கம்” என்று பெயர். அதற்கும் தலைவர் இருக்கிறார்.

நாணயத்திற்குப் பஞ்சமாக இருக்கின்ற
ஒரு நாட்டில், ஆயிரம் முனியசாமிகள் தேவை!
இப்படிப்பட்ட ஒரு நாட்டில், நாணயத்திற்குப் பஞ்சமாக இருக்கின்ற ஒரு நாட்டில், ஆயிரம் முனியசாமிகள் தேவை. அவர்களை உருவாக்குவதுதான் பெரியாருடைய இயக்கத்தின் வேலை.
நாங்கள் கடவுள் இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்கிறோம். இந்தக் கொள்கையை பலரால் ஏற்க முடியாது. அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.
எனக்குப் பேராசிரியராக இருந்து, பிறகு தலைமை நீதிபதியாக வந்தவர் நீதிபதி இஸ்மாயில் அவர்கள்.
அவர்பற்றி நீங்களெல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மிகவும் நாணயமான, ஒழுக்கமானவர். கடவுள் பக்தி உள்ளவர். சட்டக் கல்லூரியில் எனக்குப் பேராசிரியராக இருந்தவர்.
காய்கறி உணவுகளைத்தான் அவர் சாப்பிடுவார். இறைச்சி உணவுகளை சாப்பிடமாட்டார். அவரை உயர்நீதிமன்றத்தில் நகைச்சுவையாக எப்படி அழைப்பார்கள் என்றால், ‘‘இஸ்மாயில் அய்யங்கார்’’ என்றுதான் அழைப்பார்கள்.

‘‘கடவுள் இல்லை” என்று சொல்கின்ற நீங்கள் நாணயமாக இருக்கிறீர்கள்: இஸ்மாயில்!
ஒருமுறை அவர் என்னிடம், ‘‘உன்னிடம் மட்டுமல்ல, திராவிடர் கழகத்துக்காரர்கள்மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. ஏனென்றால், என்னுடைய கொள்கைக்கு நேர் எதிரானவர்கள் நீங்கள். நான் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவன். நீங்கள் கடவுள் மறுப்பாளர்கள். நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே என்று நிறைய பேர் நினைப்பார்கள். அதையே நானும் நினைப்பேன். ஆனால், கடவுள் இல்லை என்று சொல்கின்ற நீங்கள் நாணயமாக இருக்கிறீர்கள். ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நிறைய பேர் நாணயமாக இல்லை. அப்படிப் பார்க்கும்பொழுது, நீங்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு நல்லவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை” என்றார்.

மீனாட்சி அம்மனுக்கே பாதுகாப்புத் தேவை!
இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மனுக்கே பாதுகாப்புத் தேவை இருக்கிறது.
நாட்டில், அதிகமாக பக்தர்கள்தான் இருக்கிறார்கள்.
திராவிடர் கழகத்தைப்பற்றி சில பேருக்குத் தவறான கருத்துகள் இருக்கின்றன.
‘‘கடவுளை மற, மனிதனை நினை” என்று சொல்லக்கூடிய வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார் முனியசாமி அவர்கள்.
மனிதனை நினை – ஏனென்றால், மனிதனை மறந்து விட்டு, கடவுளை மட்டும் நினைத்துக்கொண்டு, கடவுள் சாப்பிடுகிறது என்று கொடுக்கிறார்கள்; அதை யாரோ ஒருவன் சாப்பிடுகிறான்.
ஆனால், பட்டினியாக இருக்கின்ற மனிதனுக்கு உண வில்லையே என்று கேட்கும்பொழுது, மனிதனை நினை என்று நாங்கள் சொல்கிறோம்.
இது யாரையும் புண்படுத்துவதற்காகவோ, சங்கடப்படுத்துவதற்காகவோ அல்ல.
இதோ பாருங்கள், இன்றைக்கு ஒரு பத்திரிகையில் வெளிவந்திருக்கின்ற செய்தியைப் பாருங்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டிற்கு நான்கு கோடி ரூபாய்க்குமேல் உண்டியல் வசூல் இருக்கிறது. வரிசையில் மூன்று மணிநேரம் காத்திருந்து உள்ளே போகிறார்கள். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கு 5 லட்சம் பேர் வருகிறார்கள் என்றெல்லாம் சொல்லலாம். ஆனால், நண்பர்களே, வெளிவந்துள்ள செய்தியின் பின்னால் இருப்பதைச் சொல்கிறேன்.

கோவிலுக்குள் பூஜை பொருள்கள் உள்ளிட்ட எதனையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை!
‘‘மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், கோவில்களுக்குச் செல்லும் நான்கு கோபுர நுழைவு வாயில்கள் உள்பட 5 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகு, உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் பூஜை பொருள்கள் உள்ளிட்ட எதனையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ள கடைகளில் பக்தர்கள் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். கோவிலின் சார்பில், நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது” என்பதுதான் அந்தச் செய்தி.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
‘‘கடவுளை மற, மனிதனை நினை” என்று பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
கடவுள் சக்தியைவிட, துப்பாக்கி ஏந்திய போலீஸ் சக்திக்குத்தான் மரியாதை அதிகம்.
மனிதனை நினைத்துத்தான் வாழ்ந்தார் நம்முடைய முனியசாமி அவர்கள். அவருடைய உழைப்பினால், தனக்கு மட்டும் அவர் சேர்த்து வைக்கவில்லை; தன்னுடைய பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் உரியதை செய்துவிட்டு, பொதுக்காரியங்களையும் செய்கிறார்.

பலருக்கு உதவிகளைச் செய்திருக்கிறார் முனியசாமி!
அவர் ஒன்றும், அதானி அல்ல; அம்பானி அல்ல. அதேநேரத்தில், அவரைப் பொறுத்தவரையில் பலருக்கு உதவிகளைச் செய்திருக்கிறார்.
எனவே, இல்லறம் என்பது எவ்வளவு முக்கியமோ – அதன் இன்னொரு பகுதியான தொண்டறமும் மிகவும் முக்கிய மாகும்.
யாருக்கு உதவவேண்டுமோ, அவர்களுக்கு உதவுங்கள்.
வாழ்க்கையில் நம்முடைய தேவைகள் நிறையதான். ஒரு மனிதனுடைய வீடு அவனுடையதாகவே இருக்கவேண்டு மானால், அந்த வீட்டைப் பொதுக்காரியத்திற்குப் பயன்படுத்தும்பொழுதுதான், அவனுடையதாகவே இருக்கும். இல்லையானால், அவர் காலத்தில் அவர் வீடு, அவருக்கு அடுத்து அவருடைய பிள்ளை வீடு. அதற்குப் பிறகு அவர் பிள்ளை அந்த வீட்டை விற்கிறாரோ, இடிக்கிறாரோ என்று தெரியாது. மூன்று தலைமுறை, நான்கு தலைமுறையில் அந்த வீடு அவருடையதாக இருக்க முடியாது.

எத்தனை தலைமுறைகள் ஆனாலும்….
ஆனால், பொதுக் காரியத்திற்கு அந்த வீட்டை அளிக்கும்பொழுது, எத்தனை தலைமுறைகள் ஆனாலும், அவர்கள் வீடாகவே இருக்குமே தவிர, பிறர் வீடாக இருக்காது என்கிற தத்துவத்தை தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.
எனவே, மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை.
சமுதாயத்திற்குத் தொண்டு செய்யவேண்டும். அந்தத் தொண்டிற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய முனியசாமி அவர்கள் இருக்கிறார்கள்.
அவர் பல்லாண்டு காலம் நல்ல உடல்நலத்தோடு வாழ வேண்டும். ஓர் எடுத்துக்காட்டான மாமனிதர் அவர்.
தான் சார்ந்த இயக்கத்திற்குக் கொடுக்க மனது வரவேண்டும்.
‘‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” என்றார் திருவள்ளுவர்.
கட்டடம் கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் அளிப்பு!
உதாரணமாக, ‘‘இங்கே இயக்கத்திற்கு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் ஒரு கட்டடம் கட்டுங்கள்; அதற்காக நன்கொடை 10 லட்சம் ரூபாயை அளிக்கிறேன்” என்றார்.
அவர் 10 லட்சம் ரூபாய் கொடுத்தார் என்பதற்காக அவரை நாங்கள் பாராட்டவில்லை. கொடுக்காவிட்டாலும் பாராட்டுவோம். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், கொடுக்கின்ற மனம் என்பதுதான் மிகவும் முக்கியம். முனியசாமி அவர்களுடைய வாழ்க்கை என்பது ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையாகும். எல்லோரும் அவரைப் போன்று அந்த அளவிற்கு வாழுங்கள்.

‘‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!”
தந்தை பெரியாருடைய வழிகாட்டலான – ‘‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்பதற்கு நம்முடைய முனியசாமி அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு.
வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை இயக்கம்!
வாழ்க முனியசாமி அவர்கள் தொண்டறம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *