ஜார்க்கண்ட், ஜூன் 23 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கெனவே பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேரை காவல்துறையினர் ஜார்க்கண்டில் கைது செய்துள்ளனர்.
இதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் பாட்னாவுக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து பீகாருக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், உத்தரப்பிரதேச காவலர் தேர்வில் வினாத்தாளைக் கசியவிட்ட ரவி அட்ரி கும்பலுக்கு நீட் வினாத்தாள் கசிவிலும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் நாள்றுதோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முக்கிய குற்றவாளியான அவதேஷ் சிக்கந்தர், முறைகேட்டில் ஈடுபட்டு பல சொத்துகள் வாங்கி குவித்துள்ளார். ஒரு வினாத்தாளுக்கு அவர் ரூ.40 லட்சம் வரை பெற்றிருக்கிறார். ஜார்கண்டின் கட்டுமானத் தொழிலில் கடந்த காலத்தில் பணியாற்றிய நண்பர்கள் மூலம் அவதேஷ் சிக்கந்தர் மோசடிப் பேர் வழி யாதவேந்துவுடன் தொடர்பு வைத்திருந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, 1,500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.