பெரம்பூர், ஜூன் 23- ஓட்டேரி சுடுகாட்டில் நள்ளிரவு கோழி, பன்றி ஆகியவற்றை அறுத்து ‘மாந்திரீகம்’ செய்த அடையாளம் தெரியாத நபர்ளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். பணம் வாங்கிக்கொண்டு அவர்களை சுடுகாட்டிற்குள் செல்ல அனுமதி அளித்த காவலாளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பி-பிளாக் மெயின் தெருவில் வசித்து வருபவர் கல்யாணசுந்தரம் (வயது 82). இவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10ஆம் தேதி இறந்தார். இவரை ஓட்டேரி சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.
இந்நிலையில், 16ஆம் நாள் காரியம் செய்வதற் காக கல்யாணசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் ஓட்டேரி சுடுகாட்டிற்கு வந்தனர். அப்போது, ஜோதிலட்சுமி புதைக்கப்பட்ட இடத்திற்கு மேல் கோழி, பன்றி, ஆகியவற்றை அறுத்து வாழை இலையில் வைக்கப்பட்டும், மண்பாண்டத்தில் முட்டை, தேங்காய் வைத்தும் யாரோ சிலர் ‘மாந்திரீகம்’ செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கல்யாண சுந்தரம் புகார் அளித்தார். அதன்பேரில், தலைமைச் செயலக காலனி காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், 20.6.2024 அன்று இரவு ஒரு மணி அளவில் காரில் வந்த 5 பேர், ஓட்டேரி சுடுகாட்டில் பன்றி, கோழி ஆகியவற்றை அறுத்து மாந்திரீகம் செய்ததும், இதற்கு சுடுகாட்டில் காவலாளியாக வேலை செய்யும் புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (வயது 56) மற்றும் வெட்டியான் ராஜேஷ் (வயது 38) ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, தாமோதரனை பிடித்து விசாரித்தனர். அதில், பரிகார பூஜை செய்ய வேண்டும், என நள்ளிரவு காரில் வந்த 5 நபரிடம், இவர் ரூ.5000 பெற்றுக் கொண்டு, சுடுகாட்டுக்குள் அனுமதித்ததும், அவர்கள் பன்றி, கோழி ஆகிய வற்றை அறுத்து பூஜை செய்துவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.
இதற்கு வெட்டியான் ராஜேஷ் என்பவர் உறுதுணையாக இருந்ததும் தெரிய வந்தது. காவலாளி தாமோதரன் சென்னை மாநகராட்சியில் பணிபுரிவதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர். மேலும் ‘மாந்திரீகம்’ செய்ய வந்தவர்கள் யார் என்பது குறித்தும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.