விடுதலையே! விடுதலையே!- கவிஞர் கண்ணிமை

viduthalai
1 Min Read
அய்யாவின் அடியொற்றி தூவல் தூக்கி
ஆசிரியர் பாசறையில் பட்டைத் தீட்டி
மெய்யான புரட்சியினை ஏற்றி வைக்கும்
மேலான விடுதலையே! புதுமை ஏடே!
தொய்வின்றி தொண்ணூறு ஆண்டாய் எங்கள்
தாய்மண்ணை ஆளுகின்ற தமிழர் ஏடே!
பொய்யான ஜாதிமத வழக்கை எல்லாம்
பொசுக்குகின்ற புத்துலகின் காட்சிக் கூடே!
தாய்மான தமிழகத்தின் உரிமை வேண்டி
தப்பாது எழுத்தாலே போர்மு ழங்கி
ஓய்வின்றி தொண்டாற்ற ஓடு கின்றார்,
ஓநாய்கள் கூட்டத்தைச் சாடு கின்றார்!
தேய்வின்றி அச்சாணி சுழல்வ தைப்போல்
துவளாது உழைக்கின்றார் உறக்கம் ஏது?
வாய்மைக்காய் தூய்மைக்காய் விடுத லைக்காய்
பாடாற்றும் தமிழர் தலைவர் என்பேன்!
நியாயத்தின் பயணத்தில் கால்ப திக்கும்
நிலையான விடுதலையே! நீதி என்னும்
தியாகத்தின் முத்திரைகள் தவழும் ஏடே!
திகைப்பூட்டும் தலையங்கம் தமிழர் தலைவர்
புயலாகப் படைக்கின்ற புரட்சி ஏடே!
புத்துலகம் காட்டுகின்ற புதிய நாடே,
அயலகத்து மக்களெலாம் வியக்கும் வண்ணம்
அருந்தொண்டு புரிகின்ற அறிவுப் பாடே!
தாய்நாட்டு விடுதலையே! பெரியார் படையே!
ஆசிரியர் கைவண்ணம் மிளிரும் ஏடே!
தேய்பிறைகள் எமகண்டம் இராகு கேது
எனச்சொல்லி அழுகின்ற இந்த நாட்டில்
ஏய்தமிழா! எழு!விழி!என்றுரக்கக் கூவி
ஏக்கத்தை மாற்றுகின்ற ஏடே! எங்கள்
சேய்மொழிகள் பாய்விரித்தே ஓடி, ஆடி
செப்புகின்ற விடுதலையே! வாழ்க! வாழ்க!
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *