பிற இதழிலிருந்து… அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்குகள் அர்த்தமற்றவை!

Viduthalai
7 Min Read

கே.சந்துரு
மேனாள் நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றம்

இ ந்தியாவின் முதல் சட்ட அமைச் சரான அண்ணல் அம்பேத்கரிடம் இந்து திருமண, வாரிசுரிமை தொடர் பான சட்டத்தைத் தயார் செய்யும் பொறுப்பு பிரதமர் நேருவால் ஒப்படைக்கப்பட்டது.
சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகன் திருமணத்துக்குச் செல்ல நேர்ந்தது. நான் போன நேரத்தில் கையில் ஒரு குடையும், காலில் பாதக்குறடுகளும் அணிந்து மாப் பிள்ளை காசியாத்திரைக்குப் புறப்பட, அவரைத் தடுத்து நிறுத்த மணப்பெண்ணின் தந்தை முயன்று கொண்டிருந்தார்.
நான் மாப்பிள்ளையின் காதில் மெதுவாகச் சொன்னேன், “காசிக்குச் செல்வதற்கு நேரடியாக விமான சேவை இருக்கும்போது எதற்கு இந்தக் கோலம்?” என்று. இது மட்டுமல்ல… காசியாத்திரைக்குப் பிறகு கன்யா தானம்… அதன் பின்னர் கெட்டி மேளத்துடன் தாலி கட்டுவது… பிறகு மாப்பிள்ளையும் பெண்ணும் விளையாடும் நலங்கு இப்படிப் பல திருமணச் சடங்குகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற விகடன் தொடர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம், இப்படிப்பட்ட திருமணச் சடங்குகள் இருப்பதைப் பலரும் அந்தத் தொடர் மூலமாக முதன்முறையாகத் தெரிந்துகொண்டதுதான்.

இந்தச் சடங்குகளையெல்லாம் யார் உருவாக் கினார்கள்… அவற்றில் எந்தச் சடங்கு திருமணத்தை நிரூபிக்க அத்தியாவசியமானது என்பது பற்றிப் பல உரையாடல்கள் இருக்கின்றன. ஏனென்றால், இந்திய துணைக்கண்டத்தில், ஒவ்வொரு பகுதியிலும் வித விதமான திருமணச் சடங்குகள், ஜாதிப் பழக்க வழக்கங்கள், பெரியவர்கள் சொல்லக்கூடிய குடும்ப நடைமுறைகள் என்று ஏராளமான சடங்கு, சம்பிரதாயங்கள் இருக்கின்றன!

திருமணமும் தீர்ப்பும்!

பிற இதழிலிருந்து...

இந்தப் பின்னணியில், சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இந்து மதத்தைச் சார்ந்த விமான ஓட்டிகள் இருவர் எளிமையான முறையில் ‘வேதிக் ஜன்கல் யாண் சமிதி’ என்ற அமைப்பின்கீழ் தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிடுகிறார்கள். கணவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்பதற்கு பதிலாக, ‘தங்களது திருமணமே செல்லாது’ என்று வழக்கு தொடுக்கிறார். ‘சடங்குகள் இல்லாத அந்தத் திருமணம், 1955-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி செல்லாது’ என்று அறிவிக் கும்படி கேட்கிறார்.
இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் புரியும்போது, அதில் அக்னி சாட்சியாக, மணமகனும் மணமகளும் ஏழடி நடந்து செல்லவில்லையென்றால் (சப்தபதி) அந்தத் திருமணம் செல்லாது என்றும், அது திருமணப் பதிவாளரிடம் பதிவு செய்திருந்தாலும் அத்தியா வசிய சடங்குகள் செய்யாததால் சட்டவிரோதம் என்றும் உச்ச நீதிமன்றமும் அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பைப் பார்த்த பலரும் தங்களது திருமணம் எப்படி நடந்தது என்றும், அதில் உரிய சடங்குகள் நிறை வேற்றப்பட்டனவா என்றும். அதிலும் அத்தியாவசி யமான அக்னி சாட்சியுடன் சப்தபதி நடைபெற்றதா என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அண்ணல் அம்பேத்கரின் முயற்சி!
இந்து திருமணச் சட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக, அது இயற்றப்பட்ட வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் ஆட்சிசெய்ய முற்பட்டபோது, அவர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த பிரதேசங்களில் திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்துக்கொள்வது போன்றவற்றைப் பற்றி முறையான சட்டங்கள் இல்லாததோடு, ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு நடைமுறைகள் இருந்து வந்ததையும் கண்டனர். எனவே, ஹென்றி மேயின் என்பவரை வைத்து இந்துக்களின் நடை முறைகளை ஒருசேரத் தொகுக்க முயன்றனர். அவரும் தனக்குத் தெரிந்த வக்கீல் நண்பர்கள் மூலம் இந்து சாஸ்திரத்தின் படியிலான சில நடைமுறைகளைத் தொகுத்து, அதுதான் ‘இந்துக்கள் சட்டம்’ என்று கூற முற்பட்டார்.
அந்த முயற்சி நடைமுறைக்கு ஒத்துவரவில்லை. எனவே, பலரும் தங்களது சவுகரியத்துக்கு ஏற்பவே நடக்க முயன்றனர்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அண்ணல் அம்பேத்கரிடம் இந்து திருமண, வாரிசுரிமை தொடர் பான சட்டத்தைத் தயார் செய்யும் பொறுப்பு பிரதமர் நேருவால் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, முதன்முறையாக இந்துக்களுக்குப் பொதுவான ஒரு வரைவுச் சட்டம் அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்துக்களின் திருமணம், அதற்கான உறவு முறைகள், வாரிசுரிமை இவற்றைப் பற்றி அந்தச் சட்டம் கருத்தில்கொண்டதோடு முதன்முறையாக ஒரு தாரத் திருமணம், பெண்களுக்கு மணவிலக்கு கோரும் உரிமை, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய அந்த வரைவு சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டது. ஆனால், இந்து மகாசபையைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸில் இருந்த சில பழைமைவாதத் தலைவர்களும் அந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். அது குறித்துப் பேசிய 28 காங்கிரஸ் உறுப்பினர்களில், 23 பேர் அந்தச் சட்ட வரைவைக் கடுமையாக எதிர்த்தனர்.
1947-இல் தொடங்கிய இந்த விவாதம் காங்கிரஸ் கட்சி தலைமையின் பலவீனத்தால் நான்கு ஆண்டு களாகியும் முடிவு பெறாமலேயே இருந்தது. இதனால் ஒருகட்டத்தில் அந்தச் சட்டமே மரணித்துப்போனது. இதனால் வெறுப்படைந்த டாக்டர் அம்பேத்கர், தனது பதவியிலிருந்து விலகி விடலாமா என்றுகூட யோசித்தார். நல்வாய்ப்பாக, புதிதாக நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதம் சார்பான உரிமை வழங்கப்பட்ட போதும், சமூக சீர்திருத்தம் தொடர்பான சட்டங்கள் இயற்றுவதற்கும் வழிவகை செய்யப்பட்டது.

1952 தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பதவியேற்ற பண்டித நேரு அரசில், மீண்டும் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர். தான் ஏற்கெனவே தயார்செய்த இந்துக்களுக்கான பொதுச் சட்டத்தை ஒதுக்கிவிட்டு, அதையே இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து தத்தெடுக்கும் சட்டம், இந்து சிறார்கள் மற்றும் காப்பாளர் சட்டம் என்று நான்கு தனித்தனிச் சட்டங்களாகத் தயார் செய்தார். அந்தச் சட்டங்களுக்கும் காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பினாலும், புதிதாக உருவான நாடாளுமன்றத்தில் நேருவுக்கு இருந்த பெரும்பான்மை பலத்தால் அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியாரின் முயற்சி!
இருப்பினும், இந்துக்களுக்கான அந்தச் சட்டங்களில் பல குறைபாடுகள், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலின வேற்றுமைகள் காணப்பட்டன.‘இந்துக்கள் தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்தாலும், அதற்கு முன் னால் திருமணங்களுக்கான சடங்குகள் நடைபெற வில்லையென்றால், அது செல்லத்தகாத திருமணம்’ என்று கருதப்படும் நிலைதான் இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் முயற்சியில் சீர்திருத்தத் திருமணங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி நடைபெற்ற சுயமரியாதைத் திருமணமொன்றை உயர் நீதிமன்றம், ‘செல்லாது’ என்று அறிவித்துவிட்டது.

எனவே, 1967-இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற தி.மு.க தலைவர் பேரறிஞர் அண்ணா, இந்து திருமணச் சட்டத்தில், ‘பிரிவு 74’ என்ற புதிய பிரிவை உருவாக்கினார். சாஸ்திரப்படி சடங்குகள் ஏதுமின்றி நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்கள் இந்து திருமணச் சட்டப்படி செல்லும் என்றும், அப்படித் திருமணம் செய்துகொண்ட மணமக்களை எந்தச் சட்டத்தின் கீழும் தண்டிக்க முடியாது என்றும் அந்தச் சட்டப்பிரிவு அறிவித்தது.
இந்தியாவிலேயே அது போன்ற ஒரு சட்டத் திருத்தம் இன்றுவரை எந்த மாநிலத்திலும் இயற்றப் படவில்லை. சடங்குகளைத் தவிர்ப்பது மட்டுமன்றி, அதிக பொருட் செலவு இல்லாத திருமணங்களாகத்தான் ஆரம்பத்தில் அவை விளங்கின. ஆனால், அது போன்ற ஜாதி மறுப்பு மற்றும் சடங்கு மறுப்புத் திருமணங்கள் செய்வதற்கு இதர மாநிலங்களில் எவ்வித ஏற்பாடும் இல்லை. அப்படிப்பட்ட திருமணம் செய்ய வேண்டு மென்றால், அவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ்தான் செய்துகொள்ள முடியும். அதற்கும் கடினமான வரையறைகள் இருக்கின்றன.

இந்துக்களுக்கான பொதுச் சட்டம்?!
தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட இந்து திருமணச் சட்டத் திருத்தத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. நாகலிங்கம் எதிர் சிவகாமி (2001) என்ற வழக்கில், ‘அந்தச் சட்டப்பிரிவு செல்லும்’ என்று அறிவித்தது உச்ச நீதிமன்றம். எனவே, இது போன்ற சட்டப் பாதுகாப்புள்ள தமிழ்நாட்டில், சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும், பொது சிவில் சட்டத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் பா.ஜ.க., இந்தியா முழுவதும் இந்துக் களுக்கான பொதுச் சட்டத்தை உருவாக்காததோடு, திருமணங் களையும், வாரிசுரிமைப் பிரச்சினையையும் சாஸ்திரத் தின் அடிப்படையில் அணுகாமல் இருப்பதற்கும் ஏற்பாடு செய்யவில்லை.

சமீபத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கன்யாதான சடங்கு செய்யாத திருமணம் செல்லும்’ என்றும், ‘அது சாஸ்திரத்தில் முக்கியமல்ல’ என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. காசியாத்திரை தொடங்கி கன்யாதானம் என்று விரிந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, நலங்கு விளையாட்டுகளுடன் நடக்கும் சடங்குகளில் எது தேவை, எது தேவையில்லை என்று ஒவ்வொன்றாகக் கூறுவதற்கு பதிலாக, தமிழ்நாட்டின் சுயமரியாதை திருமணச் சட்டத் திருத்தத்தை அகில இந்திய சட்டமாக அறிவித்தால், இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழாது.

மேலும், பாதி திருமணச் சடங்குகள் அந்தக் காலத்தில் மிகுதியாக நடைபெற்ற குழந்தைத் திருமணத்தின்போது, குழந்தைகளின் அச்ச வெளிப்பாடுகளைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டவை. கன்யாதானமும்கூட மைனர் பெண் குழந்தையை, பெற்றோர் தாரை வார்த்துக் கொடுக்கும் ஏற்பாட்டின் ஒரு வடிவமே.
திருமணம் புரிந்தவர் விரும்பினால், மனமொத்த மணவிலக்கு கோருவதற்கு சட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதேபோல் மனமொத்த இருவர் திருமணம் செய்துகொள்வதற்கு, அக்னி சாட்சியும் சப்தபதியும் கட்டாயம் என்று சொல்வதை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயலுமா?
நன்றி: ‘ஜுனியர் விகடன்’ (8.5.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *